
ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசக் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2014-2019 ஆட்சிகாலத்தில் இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக திறன் மேம்பாட்டு கழகத்தில் முறைகேடு நடந்ததாக ஆந்திர மாநில சிஐடி போலீஸார் 2021ஆம் ஆண்டில் சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், திடீரென சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது கைதுக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்தையும் அக்கட்சியினர் நடத்தினர். சந்திரபாபு நாயுடு கைதுக்கு ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷிடம் தொலைபேசியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “என்னுடைய நண்பர் (சந்திரபாபு நாயுடு) எந்தத் தவறையும் செய்திருக்கமாட்டார். அவரது பொது சேவை அவரை நிச்சயமாக வெளியே கொண்டு வரும். தவறு செய்யாத உங்கள் தந்தை விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார்.” என ஆறுதல் கூறியுள்ளார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான நடிகை ரோஜா, “ரஜினி ஒரு புத்திசாலி. ஆனால், திருடியவர்களுக்கு ஏன் ரஜினிகாந்த் ஆறுதல் கூறுகிறார்? அவர் மீது இருந்த மரியாதை போய் விட்டது. மக்களுக்கு போராடி சிறை சென்றவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தால் அனைவரும் நல்ல விதமாக பேசுவர். ஆனால், மக்களின் பணத்தை திருடியவர்களுக்கு ஆறுதல் கூறினால் என்ன அர்த்தம்? இதன் மூலம் மக்களுக்கு அவர் என்ன செய்தி சொல்ல வருகிறார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கருக்கு பிரதமர் மோடி நாளை பயணம்!
மக்களுக்கு நல்லது செய்ய வாய்ப்பிருந்தும் ரஜினி ஏன் அரசியலுக்கு வரவில்லை என கேள்வி எழுப்பிய ரோஜா, “என்.டி.ஆர் நூற்றாண்டு விழாவில் சந்திரபாபு நாயுடு குறித்து ரஜினி பேசியதற்கு எவ்வளவு எதிர்ப்பு கிளம்பியது என்பது அனைவருக்கும் தெரியும். சந்திரபாபு நாயுடு நல்லவர் என யாரும் நம்ப மாட்டார்கள். தவறு செய்தவர்களுக்கு தாமதமானாலும் தண்டனை கிடைக்கும்.” என்றார். மேலும், தங்களை காப்பாற்றிக் கொள்ளவே தெலுங்கு தேசம் பாஜகவை சுற்றி வருவதாகவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ரோஜா குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக, சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை பட்டாசு வெடித்து ரோஜா கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.