அமைச்சர் செந்தில் பாலாஜி எப்போது டிஸ்சார்ஜ்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

By Manikanda PrabuFirst Published Nov 26, 2023, 1:59 PM IST
Highlights

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதன் காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி, காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறை மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இருப்பினும், இதய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் அடிக்கடி செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் வருகிறது. அந்த வகையில், கடந்த அக்டோபர் 9ஆம் தேதி உயர் ரத்த அழுத்தம் காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட செந்தில் பாலாஜி, பரிசோதனை மேற்கொண்டுவிட்டு அன்றைய தினமே சிறைக்குத் திரும்பினார்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 15ஆம் தேதி, உடல்நலக் குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு, ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கால் மரத்து போவதால் பிசியோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவக்குழு முடிவெடுக்கும்.” என்றார்.

திமுக இளைஞரணி மாநாட்டு ஒருங்கிணைப்பாளராக கே.என்.நேரு நியமனம்!

முன்னதாக, மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கில், அவரது மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் வருகிற 28ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

அதன்படி, தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையில், மூளைக்கான எம்.ஆர்.ஐ பரிசோதனையில் வலதுபுறத்தில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் முதுகெலும்பில் வீக்கம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவருக்கு பித்தப்பை கற்கள் இருப்பதாகவும், நாளடைவில் உணவு உட்கொள்வதை அது குறைக்கும் என்றும், இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் கால்சிய படிவு உள்ளதாகவும் அந்த மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

click me!