
தொகுதி மறுவறை- அனைத்துக்கட்சி கூட்டம் : மத்திய அரசு தொகுதி மறுவறை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி மக்கள் தொகையை பொறுத்து தொகுதிகள் மாற்றி அமைக்கப்படவுள்ளதாக தெரிகிறது. இதனால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் 8 தொகுதிகள் குறையக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
45 கட்சிகளுக்கு அழைப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் படி 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், நாம் தமிழர், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இந்தக் கூட்டத்தில், அழைக்கப்பட்ட அங்கீகரிப்பட்ட கட்சிகள் சார்பில் 2 பிரநிதிகளும், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் சார்பில் ஒரு பிரநிதியும் கலந்து கொள்ள உள்ளனர்.
கூட்டத்தில் கலந்து கொள்ளும் தலைவர்கள்
அந்த வகையில் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாராதி, மூத்த வழக்கறிஞர் வில்சன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கறிஞர் இன்பதுரை, காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஷ் குமார், விடுதலை சிறுத்தைகள் - விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் பொதுச் செயலாளர் ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் - மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாநிலச் செயலாளர் சண்முகம், திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம், மதிமுக சார்பில் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் திருச்சி நாடாளுமன்ற துரை வைகோ
அனைத்துக்கட்சி கூட்டத்தின் முடிவு என்ன.?
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கவுரவ தலைவர் ஜிகே மணி, தேமுதிக சார்பில் துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி மற்றும் அவைத் தலைவர் இளங்கோவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இன்றைய கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் படி, மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்து கட்சி பிரநிதிகள் குழு டெல்லி சென்று குடியரசு தலைவரை சந்தித்து வலியுறுத்த வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
மேலும் மக்களவை தொகுதி மறுவரையறை எந்த அடிப்படையில் நடைபெறும் என்பதை ஒன்றிய அரசு தெளிவாக விளக்க வேண்டும் எனவும், விகிதாசார அடிப்படையில் தமிழகத்தில் தொகுதிகள் இப்போது உள்ள எண்ணிக்கையில் இருக்கும் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ள நிலையில் 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தொகுதி மறுவரையை செய்ய வேண்டும் என இன்றைய அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சட்ட ரீதியாக போராட்டம்
தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் தொகுதி மறுவரையறை செய்யக் கூடாது, அதை கைவி வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொகுதி வரையறை தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.