
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் 3 மொழிகளை மாணவர்கள் கற்க வேண்டும் எனக் கூறி வருகிறது. தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை செயல்படுத்த தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இரு மொழி கொள்கை மட்டுமே ஏற்றுக்கொள்வோம் எனவும் மும்மொழி கொள்கையை ஏற்க வாய்ப்பே இல்லையென திட்டவட்டமாக கூறிவிட்டது. இதன் காரணமாக தமிழகத்திற்கு வரவேண்டிய 2,152 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இதையும் படிங்க: கல்வியை அரசியலாக்காதீங்க.! எந்த மொழியையும் திணிக்கவில்லை- ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பரபரப்பு கடிதம்
இந்நிலையில் புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், பிரதமர் மோடியின் அரசு உலகளவில் தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியை ஊக்குவிக்கவும் பிரபலப்படுத்தவும் முழுமையாக உறுதிபூண்டுள்ளது. எந்த மொழியையும் திணிப்பதை தேசிய கல்வி கொள்கை பரிந்துரைக்கவில்லை. பல பாஜக அல்லாத மாநிலங்கள் அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும் NEP இன் முற்போக்கான கொள்கைகளை செயல்படுத்தியுள்ளன. கல்வியை அரசியலாக்க வேண்டாம். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராயுங்கள் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: தமிழ்நாட்டு வர வேண்டிய நிதியைத்தான் கேட்கிறோம். அதற்கு மத்திய அரசு தரப்பில் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். தமிழ்நாடு எப்போதும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகத்தான் இருந்திருக்கிறது. மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதை திட்டவட்டமாக கூறிவிட்டோம்.
இதையும் படிங்க: தெம்பு, திராணி தைரியம் இருந்தா! தொட்டு பார்க்கட்டும்! அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு சவால்!
இதில் என்ன அரசியல் இருக்கு? மொழிப்போரில் பல உயிர்களை கொடுத்த மண் தமிழ்நாடு. தமிழர்களின் உரிமைதான் கல்வி உரிமை, மொழி உரிமை. தற்போது யார் அரசியல் செய்கிறார்கள் என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலை குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர பத்தி பேச விருப்பமில்லை என கூறினார்.