தமிழகத்தில் இன்னும் ஓரிரு வாரங்களில் வலிமை சிமெண்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார்.
சென்னை: தமிழகத்தில் இன்னும் ஓரிரு வாரங்களில் வலிமை சிமெண்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார்.
தமிழகம் முழுவதும் அண்மையில் சிமெண்ட் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது. மக்கள் கடும் அதிர்ச்சி அடைய பின்னர் சிமெண்ட் நிறுவனங்களுடன் தமிழக அரசு பேசியது. அதனை தொடர்ந்து விலை ஓரளவு கட்டுக்குள் வந்தது.
ஆனால் கடந்த வாரம் முதல் மீண்டும் சிமெண்ட் விலை உயர ஆரம்பித்துள்ளது. வெகுஜனங்களையும், கட்டுமான தொழில்துறையை சார்ந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந் நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழகத்தில் வலிமை சிமெண்ட் அறிமுகம் ஆகும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இது குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி இருப்பதாவது:
2021 மார்ச் முதல் தனியார் சிமெண்ட் விலை 450 ரூபாய் என இருந்தது. பின்னர் உயர்ந்து 490 ரூபாய்க்கு விற்பனையானது. முதல்வர் உத்தரவின் பேரில் தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விலை குறைக்கப்பட்டது.
தற்போது நிலக்கரி தட்டுப்பாடு, போக்குவரத்து செலவு காரணமாக கடந்த 6ம் தேதி முதல் 490 ரூபாய் என சிமெண்ட் விற்கப்பட்டது. தற்போது உயர்ந்துள்ள விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி தமிழக அரசின் டான்செம் நிறுவனம் வலிமை என்ற பெயரில் புதிய சிமெண்ட்டை ஓரிரு வாரங்களில் அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் தமிழகத்தில் சிமெண்ட் விலை குறையும் என்றார்.