
திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டத்தை ஒப்புக் கொண்டால்தான், தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய நிதி ரூ.2,152 கோடி நிதியை வழங்குவதாக மத்திய அரசு கூறுகிறது. இத்திட்டத்தின் மூலம் தரமான கல்வியை வழங்கப்போவதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், தமிழகம் தரமான கல்வியைத் தான் வழங்கிக் கொண்டிருக்கிறது.
பி.எம்ஸ்ரீ திட்டம் மூலம் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருவதை நாங்கள் அறிந்து கொண்டோம். புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையை கொண்டு வருவது, பள்ளி இடைநீற்றலை அதிகரிக்கும் வகையிலான திட்டங்கள் இருப்பதை சுட்டிக்காட்டினோம். தமிழ்நாட்டில் பள்ளி இடைநிற்றலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இந்த ஆட்சி பொறுப்பேற்ற போது 16 சதவீதம் இருந்த பள்ளி இடை நிற்றலௌ தற்போது 5% குறைத்துள்ளோம். மும்மொழி கொள்கைக்கு எதிராக அரசியல் கட்சிகள் மட்டுமல்ல தமிழக மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஒன்றிய கல்வி அமைச்சர் எழுதிய கடிதத்தில் தமிழின் பெருமையை நாங்கள் முன்னெடுத்து கொண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். தமிழின் பெருமைகள் எல்லாம் கூறிவிட்டு இறுதியில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்து போட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருமொழிக் கொள்கையை படித்த தமிழக மாணவர்கள் பல சாதனைகளை புரிந்து தமிழக கல்வியின் தரம் சிறந்தது என்பதை நிரூபித்துள்ளார்கள். தேசிய கல்விக் கொள்கை வரையருக்கும் பொழுது எந்த ஒரு ஆலோசனையும் செய்யாமல் அவர்களாகவே வரையறுத்துவிட்டு தற்பொழுது அதை நம் மீது திணிக்கிறார்கள். ஒன்றிய அமைச்சரின் கடிதம் தூண்டிலை போட்டுவிட்டு அதில் மீன் சிக்காதா என்பது போல் தான் உள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை ஏன் ஏற்று கொள்ளவில்லை என்பதற்கான காரணங்களாக பாரம்பரிய மொழிக்கான அர்ப்பணிப்பு, இரு மொழிக் கொள்கையின் கல்வி வெற்றி, மொழி திணிப்புக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 12 காரணங்கள் அமைச்சர் கூறினார். மும்மொழி கொள்கையை அண்ணா கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரும் எதிர்த்துள்ளனர். வெவ்வேறு அரசியல் கட்சிகளாக இருந்தாலும் வெவ்வேறு கொள்கைகளை பின்பற்றி கொண்டிருந்தாலும் தமிழகத்தை சேர்ந்த ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் இரு மொழிக் கொள்கையை ஆதரிக்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள 56 மொழிகள் இந்தி மொழியால் விழுங்கப்பட்டுள்ளது. அந்த நிலை நம் தமிழ் மொழிக்கும் வந்து விடக்கூடாது. எந்த நிலையிலும் நாங்கள் அவர்களின் திட்டத்திற்கு பலியாக மாட்டோம். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தமிழ்நாட்டு வரலாற்றை அவர்கள் மாற்றி விடுவார்கள். கல்விக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் அந்த கடிதம் வெறும் காகிதம் அல்ல அது 43 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் குறித்தும் தமிழ் இனத்தை பற்றியும் எங்களுக்கு நன்றாக தெரியும் அதை நீங்கள் எடுத்து கூற வேண்டியது இல்லை.
மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசு பிளாக்மெயில் செய்வதை நிறுத்த வேண்டும். பி எம் ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஏற்கனவே தமிழக அரசு ஒத்துக் கொண்டதாக அவர்கள் கூறுகிறார்கள் அது தவறு. பாஜகவினரின் வேலையை முக்கிய பிரச்சினைகளை திசை திருப்புவது தான் அதற்காகத்தான் கெட் அவுட் ஸ்டாலின் என்பதை செய்து வருகிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திசை திருப்பும் வகையில் மிகப்பெரிய பிரச்சனையை அவர்கள் கொண்டு வருவார்கள் என்றார்.