இந்தியை திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது: உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

By Manikanda PrabuFirst Published Dec 14, 2023, 2:50 PM IST
Highlights

இந்தியை தொடர்ந்து திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

சென்னைக்கு பயணிப்பதற்காக கோவா விமான நிலையத்திற்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்  பொறியாளரிடம் இந்தி தெரியுமா? என்று கேட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். “நான் தமிழ்நாட்டுப் பெண். எனக்கு இந்தி தெரியாது” என்று பெண் பொறியாளர் கூறியதை மதிக்காத மத்தியப் படை வீரர், தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. இந்தி தேசிய மொழி. வேண்டுமானால் கூகுள் செய்து பாருங்கள். இந்தியாவில் உள்ள அனைவரும்  இந்தி கற்க வேண்டும் என்று உரத்தக் குரலில் கூறி தமிழ் பெண் பொறியாளரை அவமதித்திருக்கிறார்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக விளையட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கோவா விமான நிலையத்தில் மத்திய தொழில் படை வீரர்கள் இந்தியில் பேசியது புரியவில்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறிய போது, அவர் குழந்தையுடன் வந்திருக்கிறார் என்றும் பாராமல், “இந்தி தான் தேசிய மொழி. இது கூட தெரியாதா” என கூகுள் செய்து பார்க்கச் சொல்லி வற்புறுத்தி - மிரட்டிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Latest Videos

 

கோவா விமான நிலையத்தில் வீரர்கள் இந்தியில் பேசியது புரியவில்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறிய போது, அவர் குழந்தையுடன் வந்திருக்கிறார் என்றும் பாராமல், “இந்தி தான் தேசிய மொழி. இது கூட தெரியாதா” என கூகுள் செய்து பார்க்கச் சொல்லி வற்புறுத்தி - மிரட்டிய…

— Udhay (@Udhaystalin)

 

விமான நிலையங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை இனியும் ஏற்க முடியாது. பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படையே தவிர - இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல.

காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் 2ஆம் ஆண்டு கொண்டாட்டம்: இது நாகரிக மகிமையின் மறுமலர்ச்சி!

பல மொழிகள் பேசப்படும் இந்திய ஒன்றியத்தில் பிறமொழிப் பேசும் மக்கள் மீது இந்தியை தொடர்ந்து திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இத்தகைய போக்கினை ஒன்றிய அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழியுரிமையும் மனித உரிமையே என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தி திணிப்பை நிறுத்துங்கள்.” என பதிவிட்டுள்ளார்.

click me!