மோகனூர் பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்... அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

By Narendran SFirst Published Dec 31, 2022, 5:19 PM IST
Highlights

மோகனூர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

மோகனூர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்துள்ளது மேட்டு தெருப் பட்டாசு கடை நடத்தி வந்த தில்லை குமார், புத்தாண்டுக்காகவும் பொங்கலுக்காகவும் பட்டாசு உற்பத்தி செய்து தன் வீட்டின் அருகே உள்ள குடோனில் வைத்திருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் வீட்டில் படுத்திருந்த பட்டாசு கடை உரிமையாளர் தில்லைகுமார், அவரது அருகே இருந்த பெரியங்காள் என்ற மூதாட்டி, தில்லைகுமாரின் மனைவி பிரியா, தில்லைகுமாரின் தாய் செல்வி ஆகிய 4 பேர் உயிரிழந்தார். 

இதையும் படிங்க: தனியாரிடம் செல்லும் என்எல்சி.. 2 ‘திமுக’ அமைச்சர்கள் காரணம் - பரபரப்பை கிளப்பும் அன்புமணி ராமதாஸ்!

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த பட்டாசு வெடித்த விபத்தில் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதை அடுத்து காயமடைந்தவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுக்குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் மற்றும் கிராமம் மேட்டுத் தெரு பகுதியில் இன்று அதிகாலையில் அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறிய விபத்தில் தில்லைக்குமார், பிரியா, செல்வி மற்றும் பெரியக்காள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். 

இதையும் படிங்க: கடந்த ஆண்டை போலவே வருங்காலமும் வசந்தமாக அமையட்டும் - முதல்வர் புத்தாண்டு வாழ்த்து

இவ்விபத்தில் காயமுற்றவர்களுக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் இரண்டு இலட்சமும் மற்றும் காயமுற்றவர்களுக்கு தலா ரூபாய் ஐம்பதாயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

click me!