இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் …. வெளியான 2 நிமிடங்களில் குறுஞ்செய்தி !!

By Selvanayagam PFirst Published Apr 19, 2019, 5:42 AM IST
Highlights

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை சரியாக 9.30 மணிக்கு வெளிடப்படவுள்ளது. இணைய தளங்களில் வெளியிடப்பட்ட 2 நிமிடங்களில் 
மாணவர்கள் பதிவு செய்துள்ள பெற்றோரின் செல்போனுக்கு அனுப்பப்படும் என்றார்  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 

கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளன.

இது தொடர்பாக கோபியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்படும் என கூறினார்.

மாணவர்கள் பதிவு செய்துள்ள பெற்றோரின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவுகள் 2 நிமிடங்களில் அனுப்பப்படும். இணையத்திலும் முடிவுகள் வெளியிடப்படும். மாணவர்கள் நல்ல முறையில் வெற்றி பெற்று மேல் படிப்புக்குச் செல்ல வாழ்த்துகிறேன் என அமைச்சர் தெரிவித்தார்.

தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய பாட மாற்றத்தைப் புரிந்துகொள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்தப் பயிற்சி ஒரு வார காலத்துக்கு அளிக்கப்படும் என்றார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் 1-ஆம் தேதியே எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும். 15 நாள்களுக்குள் புதிய வண்ணச் சீருடை மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும். 8-ஆம் வகுப்பில் இருந்து 10-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு சிறிய மடிக்கணினியும், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினியும் ஜூன் 30 -ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என செங்கோட்டையன் தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு 5 ஆயிரம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் நமது கொள்கை. நீதிமன்றத்தில் தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும் என்று எதிர்பார்க்கிறோம் என அமைச்சர் கூறினார்

click me!