நிர்மலா தேவிக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கக் கூடாது: அரசு தரப்பு வாதம்!

By Manikanda PrabuFirst Published Apr 30, 2024, 4:43 PM IST
Highlights

நிர்மலா தேவிக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கக் கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்த நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதனிடையே, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த முருகன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவர் மீதும் சுமார் 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விருதுநகரில் உள்ள 2ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் முதலில் நடைபெற்று வந்தது. பின்னர், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதேசமயம், 2ஆம் மற்றும் 3 ஆம் குற்றவாளிகளான முருகன், கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லி காங்கிரஸ் தலைவராக தேவேந்திர யாதவ் நியமனம்

மேலும், வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட உதவிப் பேராசிரியை நிர்மலா தேவிக்கான தண்டனை விவரம் ஏப்ரல் 30ஆம் தேதி (இன்று) அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தண்டனை வழங்குவதற்கு முன்பு இரு தரப்பு வழக்கறிஞர்களும் நீதிபதி முன்பு தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.

நிர்மலா தேவியால் எந்த ஒரு மாணவிக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனவே, 10 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை வழங்க வேண்டும் என்று நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், நிர்மலா தேவிக்கான தண்டனையை குறைக்க கூடாது; அவருக்கான  குறைந்தபட்ச தண்டனை வழங்கக் கூடாது என்று அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பகவதி அம்மாள், தண்டனை விவரத்தை சிறிது நேரம் தள்ளி வைத்தார்.

click me!