குடியரசு தின விழாவை காண பொதுமக்கள் வரவேண்டாம்... தமிழக அரசு வேண்டுகோள்!!

By Narendran SFirst Published Jan 25, 2022, 4:11 PM IST
Highlights

குடியரசு தின விழாவை காண பள்ளி மாணவர்கள், குழந்தைகள் மூத்த குடிமக்கள் மற்றும் பார்வையாளர்கள் நேரில் வர வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

குடியரசு தின விழாவை காண பள்ளி மாணவர்கள், குழந்தைகள் மூத்த குடிமக்கள் மற்றும் பார்வையாளர்கள் நேரில் வர வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்தில் கோரோனாவின் 3வது அலை பரவி வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் குடியரசு தின விழாவை காண பள்ளி மாணவர்கள், குழந்தைகள் மூத்த குடிமக்கள் மற்றும் பார்வையாளர்கள் நேரில் வர வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.  

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய குடியரசுத் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் தமிழக ஆளுநர் ஜனவரி திங்கள் 26 ஆம் தேதி காலை 8 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளி குழந்தைகளும் பங்கேற்பர். கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு,  இந்த ஆண்டு பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும்,  கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி/ஒலி பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  கூட்டத்தை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு பொதுமக்கள், மாணவர்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் விழாவை காண நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி அல்லது வானொலியில் கண்டும், கேட்டும்  மகிழுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!