தமிழக பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டம் அறிமுகம். முன்னணி நிறுவனங்களின் ஆலோசனைப்படி பாடத்திட்டம் 15 நாட்களில் நிறைவடையும். உயர் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன.
தமிழக அரசு பள்ளிக்கல்விக்கான பாடத்திட்டத்தை தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்காக, செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை அடுத்த கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளது. ஏற்கனவே இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்ட நிலையில், இன்னும் 15 நாட்களில் பாடத்திட்டம் உருவாக்கும் பணி நிறைவு பெறும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தற்போது பல்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. தொழில்துறை, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இதன் பயன்பாடு அதிகரித்து வருவதால், இந்த தொழில்நுட்பத்தை அடிப்படை நிலையிலிருந்தே மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
எல்லைப் பாதுகாப்புப் பணியில் AI ரோபோ! ஐஐடி கவுஹாத்தியின் புதிய கண்டுபிடிப்பு!
இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை அளிக்க பாடத்திட்டத்தில் இணைக்க முடிவு செய்தது. இதற்கான பாடத்திட்ட வடிவமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், அடுத்த கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டில் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் அறிமுகமாகும் என தெரிவித்துள்ளார்.
இந்த பாடத்திட்ட மாற்றங்கள் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆலோசனை கொண்டு உருவாக்கப்பட்டதாகவும், அதற்கான பணிகள் 15 நாட்களில் முடிவடையும் எனவும் அவர் கூறினார்.
மேலும், பள்ளிக்கல்வியை நவீனப்படுத்தும் முயற்சியின் கீழ், 6000 மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படுகின்றன. 500 அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் இந்த ஆய்வு கூடங்கள் உருவாக்கப்பட உள்ளன. 2000 க்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்த புதிய பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்குவது ஒரு சவாலாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதற்காக பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம் குறித்து மாணவர்களும் பெற்றோரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி நீதிபதி வீட்டின் அருகே தீயில் கருகிய ரூபாய் நோட்டுகள்!