சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒன்றிய அரசை வலியுறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்தகட்டமாக பிரதமர் அவர்களைச் சந்திக்கவுள்ளனர்.
constituency redelineation : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் “நியாயமான தொகுதி மறுசீரமைப்பு”க்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் நடந்தது என்ன.? அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். 2026-ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கக்கூடிய தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தமிழ்நாட்டின் ஜனநாயக உரிமை,
அரசியல் பிரதிநிதித்துவ உரிமை ஆகியவை பாதிக்கப்படும் அபாயத்தையும், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டி, முன்கூட்டியே எச்சரிக்கை மணியடித்தும் இந்தியாவிலேயே முதன்முதலாக நம்முடைய தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14-2-2024 அன்று ஒருமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்.
இது எண்ணிக்கை பற்றியது அல்ல! அதிகாரத்தை பற்றியது! முதல்வர் ஸ்டாலின் முழு பேச்சு இதோ!
கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்
அடுத்தகட்டமாக, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை கடந்த 5-3-2025 அன்று கூட்டி, 1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியும்”, மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கும், பாதிக்கப்படும் மாநிலங்களுக்கும் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையை மக்களுக்கு வெளிப்படுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படனும்
நமது நியாயமான கோரிக்கைகளையும், அவைசார்ந்த போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்லவும், ஒன்றிய அரசிற்கு மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், “கூட்டு நடவடிக்கை குழு” ஏற்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான முன்னெடுப்பில் மிகத்தீவிரமாகச் செயல்பட்டு 22-3-2025 அன்று அந்தக் கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
விரிவான ஆலோசனைக்குப் பிறகு “நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும்”; “1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்”; “மக்கள்தொகை கட்டுப்பாடுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது”; “உரிய அரசியல் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்”; “கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்”;
தொகுதிகள் மறுசீரமைப்பு! மக்களவை சட்டப்பேரவை தொகுதிகளை ஒடிசா இழக்கும்! நவீன் பட்நாயக்!
பிரதமரை சந்திக்க முடிவு
“நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இதுகுறித்து பிரதமர் அவர்களுக்குக் கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் சந்தித்து கடிதம் அளித்து முறையிடுவது” என கூட்டாட்சி தத்துவம், ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாடு முன்னெடுத்துச் செல்கின்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்த விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்காக இந்த முன்னெடுப்பிற்கு துணை நின்ற தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும், கூட்டு நடவடிக்கைக் குழுவில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் தமிழ்நாடு மக்களின் சார்பில் இப்பேரவையின் வாயிலாக என்னுடைய இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மோடியை சந்திக்கும் தமிழக எம்பிக்கள்
அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்று நமது உரிமைகளை, நம் போல் பாதிக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுத்திட, நியாயமான தொகுதி மறுசீரமைப்பைப் பெற்றிட தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை எல்லாம் அழைத்துச் சென்று பிரதமர் சந்திக்கவிருக்கிறோம் என்பதையும் இந்த அவைக்குத் தெரிவித்து அமைகிறேன்.