
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு :
மக்கள் நலப்பணியாளர் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். மக்கள் நல பணியாளர் தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளது. கிராம அளவிலான பல்வேறு பணிகளுக்காக 1989-ல் 25,354 மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 1991ல் அதிமுக ஆட்சியில் 25,234 மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 1997 பிப்ரவரியில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரப்பட்டது.
பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு 2001 ஜூன் மாதம் மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் வேலையை விட்டு நீக்கியது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் 2006 ஜூனில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை அளித்தார் கலைஞர். ஊராட்சிக்கு ஒருவர் என்ற அடிப்படையில் 12,618 பேர் மக்கள் நலப்பணியாளர்களாக மீண்டும் நியமனம் செய்யப்பட்டனர். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 2011 நவம்பரில் மக்கள் நலப்பணியாளர்களை பணி நீக்கம் செய்தார் ஜெயலலிதா.
மீண்டும் வேலை :
மாநிலத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளில் உள்ள வேலை உறுதித்திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர் என்ற பணிக்கு விருப்பம் தெரிவிக்க கூடிய முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த பணி வழங்க வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள மதிப்பு ஊதியம் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மக்கள் நலப்பணியாளர்கள் ஏற்கனவே கிராம ஊராட்சி பணிகளில் பணியாற்றியதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு கிராம ஊராட்சி பணிகளை கூடுதலாக கவனித்து கொள்ள வாய்ப்பளித்து அதற்கென மாநில நிதிக்குழு மானியத்திலிருந்து மாதம் ரூ.2500 வழங்கி ஒட்டுமொத்த மதிப்பு ஊதியமாக ரூ.7500 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினார்.