
வேலூர்
வேலூரில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதைக் கண்ட வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
வேலூர் மாவட்டம், வேலூர் - ஆரணி இடையேயுள்ள சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
வேலப்பாடியில் உள்ள தாலுகா அலுவலகம் அருகே ஆரணி சாலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திடீரென பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டது. அப்போது, அந்த பள்ளத்தில் மண்ணைக் கொட்டி தற்காலிகமாக மூடப்பட்டதே தவிர அதற்கு நிரந்தரமான தீர்வு காணப்படவில்லை. இதனால், வாகனங்கள் செல்ல செல்ல அந்த இடத்தில் மேலும் மேலும் பள்ளம் ஏற்பட்டு சாலை மீண்டும் உள்வாங்கி கொண்டே போனது.
இந்த நிலையில் நேற்று காலை அதே இடத்தில் மீண்டும் திடீரெனப் பெரிய பள்ளம் ஏற்பட்டது. சுமார் ஐந்தடி ஆழத்திற்கு, மூன்றடி அகலத்திற்கு இந்தப் பள்ளம் ஏற்பட்டது.
அப்போது, அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பள்ளத்தை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். ஒருசிலர் இது அவ்வப்போது ஏற்படும் பள்ளம் தான் என்று சலித்துக் கொண்டு சென்றுவிட்டனர்.
இதனையடுத்து அந்தப் பள்ளத்தை சுற்றிலும் கற்களை கொண்டு தடுப்புகள் போடப்பட்டு பள்ளத்தைச் சுற்றிலும் கயிறு கட்டி வைக்கப்பட்டது.
இந்தப் பள்ளத்தையாவது மூட நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொண்டனர்.