பள்ளிக்கு சென்ற மாணவி மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி சென்ற மாணவி உயிரிழப்பு
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையானது கடந்த மாதம் 13 ம் தேதியிலிருந்து விடப்பட்டது. இதனை அடுத்து சுமார் 30 நாட்களுக்குப் பிறகு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் சாக்லெட், ரோஜாப்பூக்கள் கொடுத்து வரவேற்றனர். இந்த வரவேற்ப்பு முடிவடைவதற்க்குள் பள்ளியில் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மதுக்கரையை சேர்ந்த பள்ளி மாணவி கோடை விடுமுறைக்கு பின்பு நேற்று முதல் முறையாக பள்ளிக்கு சென்ற நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் மர்மமான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவை மதுக்கரை மார்க்கெட் சர்ச் காலனியை சேர்ந்த பார்த்திபன்,சகாயராணி தம்பதிகளின் மகள் சௌமியா குனியமுத்தூர் நிர்மலா மாதா மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கோடை விடுமுறைக்கு பின்பு முதலாவது நாளாக பள்ளி திறந்த நிலையில் சிறுமி சௌமியா பள்ளிக்கு சென்றுள்ளார் .அப்போது சௌமியா வகுப்பறையில் காலை 11;30 மணியளவில் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.இந்த நிலையில் பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து பெற்றோர் கோவை மதுக்கரை மார்க்கெட்டில் இருந்து வரும்வரை கால தாமதம் ஆகும் என்பதால் பள்ளி நிர்வாக ஆசிரியர்கள் சிறுமியை குனியமுத்தூரில் உள்ள சங்கீதா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கதறி துடித்த பெற்றோர்
இந்த சூழலில் மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் மருத்துவர்களை சந்தித்தனர். அப்போது மருத்துவர்கள் சிறுமி நலமுடன் இருப்பதாக தெரிவித்த நிலையில் சில மணி நேரங்களில் சிறுமி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்து வந்த மாணயின் உறவினர்கள் அனைவரும் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாணவியின் உறவினர்கள் நல்ல நிலையில் சென்ற சிறுமிக்கு இம்மருத்துவமனையில் சரியான சிகிச்சை கொடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டியதுடன்குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பது குறித்து தகவல் அளித்திருந்தால் வேறு பெரிய மருத்துவமனைக்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ அழைத்துச் சென்று பாதுகாத்து இருப்போம் எனவும் தெரிவிக்கின்றனர். பள்ளி திறந்த முதல் நாளில் மாணவி உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகே மாணவியின் மர்ம மரணத்திற்கு விடை கிடைக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
பிக்பாஸ் நடிகையை துரத்திய மர்ம நபர்...! அலறி துடித்து வீடியோ பதிவிட்ட ரேடியோ ஆர்.ஜே. வைஷ்ணவி