
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவம்பர் 4ஆம் தேதி ஆரம்பமானது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) வீடு வீடாக சென்று படிவங்களை விநியோகித்தனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெறுவதற்காக சிறப்பு முகாம்களும் நடைபெற்றன. டிசம்பர் 11ஆம் தேதி வரை படிவங்களை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அந்தந்த மாவட்ட ஆட்சியகள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில், நீக்கப்பட்ட வாக்காளர்கள், இறந்துபோனவர்கள் விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே தமிழக வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாக்காளர் பட்டியல் பெயர் இருக்கிறதா என்பதை, voters.eci.gov.in இணையதளத்தில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை Enter செய்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுகுக மீண்டும் பெயர் சேர்க்க மற்றொரு வாய்ப்பும் உள்ளது. புதிய வாக்காளர் விண்ணப்பத்திற்கு படிவம் 6-ஐ பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு ஜனவரி 18 வரை அவகாசம் உள்ளது.
வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் இரண்டுக்கும் விண்ணப்பிக்க முடியும். பட்டியலில் உள்ள பெயர்களுக்கு மறுப்பு தெரிவித்தும் புகார் அளிக்கலாம். ஜனவரி 18க்குப் பிறகு இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும். அதன்படி, தகுதியான வாக்காளர்களை பட்டியல் சேர்க்கப்படுவார்கள். பின்னர், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெளியிடப்படும்.