போராட்ட அறிவிப்பை கைவிடுங்கள்... பொங்கலுக்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு- உறுதி கொடுத்த சிவசங்கர்

By Ajmal KhanFirst Published Jan 3, 2024, 12:00 PM IST
Highlights

 ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்பதையும், பொங்கல் விடுமுறைக்குப் பின்பு தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்சினைகளும் தீர்த்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு அழைத்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அனைத்து போக்குவத்து தொழிற்சங்கங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றன.

Latest Videos

கடந்த அ.தி.மு.க ஆட்சி, தமது காலத்தில் பதினான்காவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உரிய காலத்தில் முடிக்காமல் தொழிலாளர்களை நிர்கதியாக நிற்க வைத்தது, எந்த கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மாண்புமிகு திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்று கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

 கேட்காமலையே கூடுதலாக போனஸ்

மகளிர் கட்டணமில்லா பயணத்திற்கு இந்த ஆண்டு மட்டும் ரூ 2800 கோடி ஒதுக்கி, டீசல் மானியமாக ரூபாய் 2000 கோடியும் மாணவர் இலவச பஸ் பயணத்திற்காக ரூபாய் 1500 கோடியும் ஒதுக்கீடு செய்தவர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசாணை 35-ஐ பிறப்பித்து போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் மூலம் போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக செயல்பட காரணமானவர் நம் முதல்வர். புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கி, புதிய பணியாளர்கள் நியமனத்திற்கு அனுமதி அளித்து துறை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளவர் நம் முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். 

தீபாவளி போனஸ் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் குறைத்து வழங்கப்பட்டதை, யாரும் கோரிக்கை வைக்காமலேயே மீண்டும் 20 சதவிகிதமாக உயர்த்தி ரூபாய் 16,800/- வழங்கியவர் நம்முடைய முதல்வர் தான் இதற்கும் எந்த போராட்டமும் நடத்தப்படவில்லை. மக்கள் மனமறிந்து செயல்படுவது போலவே தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுபவர் தான் நம் முதல்வர். போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு, வாரிசு அடிப்படையிலான பணி போன்றவைகளை இந்த அரசு நிறைவேற்றி தந்துள்ளது. இப்போது சென்னையில் வரலாறு காணாத அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் அதனால் பொதுமக்கள் சந்தித்துள்ள இழப்புகளை சீர் செய்ய நம் முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதை எல்லோரும் அறிவோம்.

 பொங்கலுக்கு பிறகு பேச்சுவார்த்தை

இந்த இயற்கை பேரிடருக்கு, ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை கூட வழங்க முன்வராத நிலையில், முதல்வர் நிவாரண தொகுப்பை அறிவித்து வழங்கி வருகிறார்கள். முழு அரசு இயந்திரமும் இந்தப் பணியில் ஈடுபட்டு வருவதை அனைவரும் அறிவோம். பேரிடர் நேரத்தில் உடனடியாக களம் இறங்கி பேருந்துகளை வழக்கம் போல் இயக்கி, மக்கள் இயல்பு நிலைக்கு வர முன் நின்றவர்கள் நம் போக்குவரத்து துறை தொழிலாளர்கள். அதே போல தொழிற்சங்கங்களும் முதல்வருக்கும், பொதுமக்களுக்கும் இந்த பேரிடர் நேரத்தில் உறுதுணையாக நிற்க அன்போடு வேண்டுகிறேன்.

எனவே, போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் உணர்ந்துகொண்டு பணியில் உள்ள தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்பதையும், தமிழர் திருநாளாம் பொங்கல் விடுமுறைக்குப் பின்பு தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்சினைகளும் தீர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். எனவே போராட்ட அறிவிப்பை கைவிட அன்போடு வேண்டுவதாக அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

பாஜகவின் கையாளாக ED... நிர்மலா சீதாராமனுக்கு தகுதியே இல்ல.. அவர முதல்ல நீக்குங்க - ஐஆர்எஸ் அதிகாரி விளாசல்

click me!