மாணவி மரண வழக்கு.. தந்தையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்டு உத்தரவு..

By Thanalakshmi VFirst Published Jul 21, 2022, 12:55 PM IST
Highlights

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தையின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு கோரிக்கை என்றாலும் ஏற்கனவே வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 
 

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் மாணவியின் மர்ம மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் மாணவியின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ்குமார், மாணவியின் உடலை 2 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மறு உடற்கூராய்வு செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார். 

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி கலவரம்.. முன்பே எச்சரித்த மாநில உளவுத்துறை.. கோட்டைவிட்ட காவல்துறை.. வெளியான அதிர்ச்சி தகவல்.!

மேலும் உடற்கூராய்வின் போது   மாணவியின் தந்தை தனது வழக்கறிஞருடன் உடனிருக்க அனுமதி அளிக்கப்பட்டது. முன்னதாக, கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான விவகாரத்தில் நடத்த வன்முறையை அடுத்து, டிஜிபி சைலேந்திர பாபு, சந்தேக மரண வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என்று அறிவித்தார்.ஆனால் உடற்கூராய்வின் போது தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை அனுமதிக்க வேண்டும் என்று தந்தை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கை நிராகரித்த நீதிமன்றம், மறு உடற்கூராய்விற்கு உத்தரவிட்டது.  அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற மாணவியின் தந்தை சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அதன்படி உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது மாணவியின் பெற்றோர் தரப்பில், நேற்று நடைபெற்ற மறுபிரேத பரிசோதனை மாணவின் பெற்றோர் இல்லாமல் நடந்துள்ளது. அதுகுறித்த முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. எனவே தங்கள் தரப்பு மருத்துவ குழு மூலம் மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:Viral Video : கள்ளக்குறிச்சி மாணவி இரவு நேரத்திலேயே மூன்றாம் மாடிக்கு சென்றாரா? புதிய வீடியோவால் பரபரப்பு!

ஆனால், அதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்த தமிழக அரசு தரப்பு,  மறுபிரேத பரிசோதனை மாலை 4 மணியளவில் நடைபெற்றது, ஆனால் உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு மதியம் 12.23 மணியளவில் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. உரிய கால நேரம் இருந்தும் அவர்கள் வரவில்லை என்று வாதிடப்பட்டது.  மேலும் இந்த விவகாரத்தில் மீண்டும் கலவரம் போன்ற அசம்பாவிதங்கள் நடந்துவிடக்கூடாது என்பதில் அரசும், காவல்துறையும் கவனமாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை மனுதாரர் தரப்பு தவறாக வழிநடத்துகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, மாணவியின் தந்தை தரப்பில், மறு உடற்கூறாய்வின்போது  வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதை, தங்கள் தரப்பு வல்லுனர் ஆய்வு நடத்த அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது. அப்போது  நீதிபதிகள் இந்த கோரிக்கைகளை சென்னை உயர்நீதிமன்றத்திடமே வைக்கலாமே என தெரிவித்ததோடு,  இந்த மனுக்களை வாபஸ் பெறாவிட்டால், தள்ளுபடி செய்வதாக கூறினர். இதனையடுத்து மாணவியின் தந்தை தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக கூறினர். 

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இரவு நேரத்திலேயே மூன்றாம் மடியில் இருந்து கீழே விழுந்தாரா?புதிய வீடியோவால் பரபரப்பு

வழக்கை வாபஸ் பெற ஒப்புதல் அளித்த நீதிபதிகள், இனி இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு கோரிக்கை என்றாலும் ஏற்கனவே வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட வேண்டும்  என அறிவுறுத்தி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அப்போது, சட்டம் ஒழுங்கு காரணமாக மாணவி உடலை இதற்குமேல் தாமதிக்காமல் நல்லடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், உடலை நல்லடக்கம் செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என உத்தரவிட்டனர்.

click me!