
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து அதே கோயில் பணிபுரிந்துவந்த சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், சுகனேஸ்வர் கோயில் ஆகமத்தின் அடிப்படை ஆனது, இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதிகள், ஆகமத்தின் அடிப்படை இல்லை என கூறியிருந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். “யார் வேண்டுமாலும் அர்ச்சகர் ஆகலாம். குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் சாதிக்கு எந்த பங்கும் இல்லை.” என உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கினை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தனிநீதிபதி தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.
மகளிருக்கு ரூ.1500, பழைய ஓய்வூதிய திட்டம்: வாக்குறுதிகளை அள்ளி வீசிய கார்கே!
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்ப்பை எதிர்த்து சுப்பிரமணிய குருக்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேசன் மற்றும் பல்கிவாலா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதிகள், கோயில் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, சுப்பிரமணிய குருக்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
முன்னதாக, முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் தலித் சமூகத்தினர் உட்பட அனைத்து சாதியை சேர்ந்த 28 பேரை பல்வேறு கோயில்களில் அர்ச்சகர்களாக நியமித்தார். இதனை எதிர்த்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், அர்ச்சகர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விதித்த விதிகள் செல்லும் என்றும் ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களில் அந்த ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.