ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கசிவு; எல்லா கந்தகமும் எங்கே போகுது தெரியுமா? ஆட்சியர் சொல்றாரு கேளுங்க...

First Published Jun 22, 2018, 10:22 AM IST
Highlights
Sulfuric acid leak in Sterlite plant Do you know where all sulfur is going? collector says


தூத்துக்குடி 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கசிவான கந்தக அமிலம் அனைத்தும் கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மாதம் 22–ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவலாளர்கள் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில், 13 பேர் கொல்லப்பட்டனர். 

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த மாதம் 28–ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது. அதன்படி அந்த ஆலை மூடி ‘சீல்‘ வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கந்தக அமிலம் கன்டெய்னரில் கசிவு ஏற்பட்டது. எப்படி ஏற்பட்டது என்பது கேள்விக் குறிதான்? இந்த கசிவினால் கந்தக அமிலத்தை ஆலையில் இருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

அதன்படி கடந்த 18–ஆம் தேதி முதல் டேங்கர் லாரிகள் மூலம் கந்தக அமிலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களாக இரவு, பகல் என கந்தக அமிலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்தப் பணி நேற்று 4–வது நாளாகவும் நீடித்தது. நேற்று ஏராளமான டேங்கர் லாரிகளில் கந்தக அமிலங்கள் ஏற்றப்பட்டன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறியது: 

"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமிலம் சேமிப்பு கன்டெய்னரில் ஏற்பட்ட கசிவு கண்டறியப்பட்டு, கந்தக அமிலம் வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

மாசுகட்டுப்பாட்டு வாரியம், தொழிற்சாலைகள் ஆய்வாளர், காவல் துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத் துறையை சேர்ந்த அதிகாரிகள் தலைமையில் இப்பணி நடைப்பெற்று வருகிறது. 

இதுவரை 40 டேங்கர் லாரிகள் மூலம் 800 டன் கந்தக அமிலம் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. இன்று (நேற்று) காலையில் 5 டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் ஏற்றப்பட்டு வருகிறது. அங்குள்ள கந்தக அமிலம் 100 சதவீதம் அப்புறப்படுத்தும் வரை இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும். 

ஒரு நாளைக்கு 25 டேங்கர் லாரிகளில் அமிலம் ஏற்றப்பட்டால் விரைவில் பணி முடிக்கப்பட்டுவிடும். கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் கந்தக அமிலத்தை மூலப்பொருளாக கொண்டு செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளுக்கு இந்த அமிலம் கொண்டு செல்லப்படுகின்றன" என்று ஆட்சியர் தெரிவித்தார்.
 

click me!