
விருதுநகர்
விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை பிணவறையில் குளிர்சாதன பெட்டி செயலிழந்ததால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நோயாளிகள், மற்றும் ஊழியர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இதுமட்டுமின்றி தினமும் புற நோயாளிகள் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனர்.
விருதுநகர், மல்லாங்கிணறு, ஆர்.ஆர்.நகர். ஆமத்தூர், எரிச்சநத்தம் பகுதியில் விபத்தில் சிக்கி காயமடைவோருக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தோர் சடலங்கள் இங்குள்ள பிணவறையில் வைக்கப்படுகின்றன.
இதில், நான்கு சடலங்களை மட்டும் குளிர்சாதன பாதுகாப்பில் வைத்திருக்க முடியும். இங்குதான் அடையாளம் தெரியாமல் உயிரிழந்தோர் சடலங்களும் இங்கு தான் பாதுகாக்கப்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பிணவறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டி சரிவர இயங்கவில்லை. இதனால், இப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.
இப்பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் தொற்றுநோய் பரவுமோ என்று அச்சத்தில் இருக்கின்றனர்.
எனவே, பிணவறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டியை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள், ஊழியர்கள் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தப் பிணவறைப் பிரிவில் இரண்டு ஊழியர்கள் மட்டுமே பணி புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.