
திருவண்ணாமலை
செய்யாறில் தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், குடிபானங்கள் விற்பனையைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கட்சிச் சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஒன்றாகக் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் உள்ள கடைகளில் தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், குடிபானங்கள் போன்ற போதைப் பொருள்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
இதனைத் தடுக்க சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
அரசு சாராயக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் திருட்டுத் தனமாக சாராயங்கள் விற்கப்படுவதை காவல் துறையினர் தடுக்க வேண்டும் என்றும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஒன்றாக திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் புருஷோத்தமன் தலைமைத் தாங்கினார்.
இதில், தடைச் செய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா பாக்கெட்டுகளை கிழித்து தரையில் கொட்டி முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தி கூட்டத்தில் ஜமாபந்தி அலுவலரான குணசேகரனிடம் விவசாயிகள் சங்கத்தினர் அளித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.