
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது. இது தன்னலமற்ற செயல்களைச் செய்த குழந்தைகளுக்கும், வீர தீர செயல்களை செய்த சிறந்த சாதனைகள் கொண்ட சிறு குழந்தைகளுக்கும், மற்றவர்களுக்கு விதிவிலக்கான துணிச்சல் உள்ள குழந்தைகளுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்கிறது.
மேலும், விளையாட்டு, சமூகசேவை, அறிவியல், தொழில்நுட்பம், புதுமையான கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்திய குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த விருதை பெற இந்திய குடிமகனாக, இந்தியாவில் வசிப்பவராகவும், 5 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
இந்நிலையில், விழுப்புரம், மாவட்டம், செஞ்சி அருகே நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தைச் சேர்ந்த ராஜா - ஷிவானி தம்பதி. இவர்கள் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவரது மகளான சிந்தூரா ராஜா (16). இவர் பெங்களூரூ, இந்திரா நகரில் உள்ள நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு இன்று குழந்தைகளுக்கான இந்தியாவின் உயரிய சிவில் விருதான பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவர் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
கடந்த 2024 மே மாதத்தில் நியூயார்க் நகரத்தில் நடந்த உலக அறிவியல் விழாவில் இந்தியாவுக்காக சிந்துராவுக்கு உலக அறிவியல் அறிஞர் (World Science Scholar) என்ற பட்டம் வழங்கப்பட்டது. பால் புரஸ்கார் விருது பெற்றுள்ள சிந்தூரா, நோபல் பரிசு பெற்றவர்களும், பிரேக்த்ரூ பரிசு வெற்றியாளர்களும் நடத்தும் பாடங்களை கற்று, அவர்களுடன் திட்டங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதை பெற்ற சிந்தூரா ராஜா அந்த ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார்.