
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இளம்பெண்ணின் தாயார் மளிகை கடைக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஏலகிரி கிராமம் மூடன் வட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் பிரபு (39). இவர் முன்னாள் ராணுவ வீரர் இளம் பெண் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது இளம் பெண்ணிடம் பிரபு அத்துமீறியது தெரியவந்தது. மேலும் அப்பகுதி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று முன்னாள் ராணுவ வீரரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இதனை தொடர்ந்து இளம்பெண்ணின் தாயார் நேற்று ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபுவை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஜோலார்பேட்டை பகுதியில் தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்களை பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபர்களால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.