தமிழக மீனவர்கள் படகுகளை ஏலம் விடுவதற்கு கண்டனம்... வேலை நிறுத்தத்தை அறிவித்த ராமேஸ்வரம் மீனவர்கள்!!

By Narendran SFirst Published Jan 24, 2022, 3:38 PM IST
Highlights

தமிழக மீனவர்கள் படகுகளை இலங்கை கடற்படை ஏலம் விடுவதை தடுக்காவிட்டால் வரும் 2 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம் விடப்படுகிறது என்ற இலங்கை அரசின் அறிவிப்பால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராமேசுவரம், மண்டபம், நாகப்பட்டினம் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, காரைநகர், தலைமன்னார் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் 100க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, காரைநகர், மன்னார், உள்ளிட்ட பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடப்படுவதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பில், காரைநகர் – 65, காங்கேசன்துறை – 05, கிராஞ்சி -24, தலைமன்னார் – 09, கற்பிட்டி – 02 என 105 படகுகள் ஏலம் விடப்படுகிறது. வருகிற பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை ஏலம்  நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழக மீனவர்கள் படகுகளை இலங்கை கடற்படை ஏலம் விடுவதை தடுக்காவிட்டால் வரும் 2 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இலங்கையிலேயே மூழ்கி போன படகுகளுக்கு தமிழக முதல்வர் நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். இந்த நிலையில் அந்த படகுகளை இலங்கை அரசு நேற்று பகிரங்க ஏலம் விடுவதாக அறிவித்துள்ளதை மீனவர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர். இந்திய அரசு அதற்கு உரிய எதிர்ப்பு தெரிவிக்காத சூழலில் மீனவர்கள் இன்று அவசர கூட்டம் கூட்டி கோரிக்கை வைத்துள்ளனர். ஒவ்வொரு மீனவனின் உழைப்பும், ரத்தமும், வியர்வையும் சேர்ந்தது அந்த படகு. அந்த படகுகள் இந்திய அரசின் சொத்து. அந்த படகுகளை ஏலம் விடுவதை மீனவர்கள் வன்மையாக கண்டிக்கின்றனர். இதனை உடனடியாக இந்திய அரசு தடுத்து நிறுத்தவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழக அரசு வழங்கியது போல ஒன்றிய அரசும் ஏழை மீனவ குடும்பங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இலங்கை கடற்படையால் மூழ்கிப்போன அந்த படகுகளை எடுத்துக்கொண்டு வருவதற்கு அரசு அனுமதி வழங்க கோரி இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். வரும் 2 ஆம் தேதிக்குள் ஏலம் விடுவதை தடுத்தி நிறுத்தி இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாங்கள் இந்திய மக்கள் இல்லை என்று இந்திய அரசு கொடுத்துள்ள ஆவணங்களை மாவட்ட ஆட்சி தலைவரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் அந்நிய செலாவணி கொடுக்கின்ற மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக அழிந்து வருகிறது. உடனே இலங்கை அரசு படகுகளை ஏலம் விடுவதை தடுத்து நிறுத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க மீனவர்களின் தரப்பில் கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.

click me!