ஸ்டாலினுக்கு எதிராக நேரடியாக களத்தில் குதிக்கும் ராமதாஸ்.! தேதி குறித்த பாமக

Published : Sep 25, 2025, 10:05 AM IST
reservation for Vanniyar

சுருக்கம்

Reservation for Vanniyar : வன்னியர்களுக்கு 10.5% தனி இட ஒதுக்கீட்டை மீண்டும் செயல்படுத்தக் கோரியும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தியும்  டிசம்பர் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Ramadoss statement on Vanniyar quota : பாமகவின் முக்கிய கோரிக்கையாக இருப்பது வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு கோரிக்கையாகும். அந்த வகையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி முக்கிய அறிவிப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கியதில் இருந்து சமூக நீதிக்காகவும் அனைத்து தரப்பு மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வேண்டியும் பல போராட்டங்களை நடத்தி அதில் பல சமூக மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடும், உள் ஒதுக்கிடையும் பெற்றுத் தந்ததில் நமது பங்களிப்பு மிகப்பெரிய பங்களிப்பாகும். நமது வன்னிய சமூகத்திற்கு என்று தனி உள் ஒதுக்கீடு கேட்டு பல ஆண்டு காலமாக நாம் கோரிக்கைகளை வைத்து போராடி வந்தோம்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு

கடந்த அ.தி.மு.க ஆட்சிக் ‌கால‌த்தில், எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வராக இருந்தபோது, நமது வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் அறவழியிலான தொடர் போராட்டங்களையடுத்தும், நமது முன்னெடுப்புகளாலும் வன்னியர்களுக்கென்று 10.5 விழுக்காடு த‌னி இடஒதுக்கீடு வழங்கி, சட்டம் இயற்றி, அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்குப் பின் வந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் சில விஷமிகள் நீதிமன்றங்களில் வன்னியர்களின் 10.5 இட ஒதுக்கீடுக்கு எதிராக தவறான தகவல்களை அளித்து தடையாணை பெற்று, அந்த சட்டத்தை நடைமுறைப்ப‌டுத்தாமல் தடுத்து, ந‌ம‌க்கு நியாய‌மாக‌ கிடைக்க‌ வேண்டிய‌ பலன்க‌ள் கிடைக்காமல் செய்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நான் நேரில் சந்தித்தும், பலமுறை கடிதங்கள் மற்றும் அறிக்கைகள் வாயிலாகவும் சாதிவாரி கணக்கீட்டை விரைவாக‌ ந‌ட‌த்தி ம‌க்க‌ள் தொகை அடிப்படையில், வன்னியர்களின் எண்ணிக்கைக்கேற்ப சரியான அளவிலான இடப் பங்கீட்டை அதிகப்படுத்தி தர வேண்டும் என்றும், அதுவரையில் 10.5 விழுக்காடு தனி ஒதுக்கீட்டை உடனே பெறுகின்ற வகையில் நீதிம‌ன்ற‌த்தில் போதுமான தரவுகளை அளித்து தடையாணையை நீக்கிட‌ வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தும் இதற்காக அற‌வ‌ழியில் போராட்டங்கள் நடத்தி அரசின் க‌வ‌ன‌த்தை ப‌ல‌முறை ஈர்த்தும் இருக்கின்றோம்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு போராட்டம்

ஆனால் ந‌ம்முடைய‌ நியாய‌மான‌ கோரிக்கைக்கும், கூக்குர‌லுக்கும், இன்றைய‌ த‌மிழ‌க‌ அர‌சு, இதுநாள்வ‌ரை செவி சாய்க்க‌வில்லை என்ப‌து, மிக‌வும் வ‌ருத்த‌த்துக்கும், க‌டும் க‌ண்ட‌ன‌த்துக்கும் உரிய‌து. தற்போதைய திமுக அரசினுடைய ஆட்சிக் காலம் இன்னும் சில‌ மாத‌ங்க‌ளில், முடிவடைய இருக்கும் இந்த இறுதிக் க‌ட்ட‌த்திலாவ‌து, நம்முடைய கோரிக்கைகளை கவனமுடன் பரிசீலித்து, உரிய நடவடிக்கைகளை எடுத்து,வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன். அவ்வாறு நடக்காத பட்சத்தில் அதற்கான போராட்டங்களை தொட‌ர்ந்து நடத்துவ‌து வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் த‌லையாய‌ க‌ட‌மையாகும்.

வன்னியர் இட ஒதுக்கீடு- டிசம்பர் 5 ஆம் தேதி போராட்டம்

எனவே, 'அனைத்து ம‌க்க‌ளுக்குமான‌ சாதிவாரிக் க‌ண‌க்கெடுப்பை உட‌னே ந‌ட‌த்து! " அதுவ‌ரை இடைக்கால ஏற்பாடாக வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு தனி ஒதுக்கீட்டை த‌டுக்கின்ற நீதிம‌ன்ற‌த் தடையாணையை போக்கி வன்னியர்களுக்கு தனி இட‌ ஒதுக்கீட்டை வ‌ழ‌ங்கிடு! என்கிற முழக்கங்களை முன் வைத்து தமிழக அரசை வலியுறுத்திடவும், சாதிவாரி கணக்கு எடுப்பு மற்றும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு நியாயத்தை, தமிழக மக்களிடம் கொண்டு சேர்த்து தெளிவுபடுத்தவும், 

வருகின்ற டிசம்பர் ஐந்தாவது நாள், காலை முத‌ல் மாலை வ‌ரை, தமிழகத்தினுடைய அனைத்து மாவட்டங்க‌ளிலும், அந்த‌ந்த‌ மாவ‌ட்ட‌ ஆட்சியர் அலுவலகங்களின் முன்பாக‌ அறவழியிலான தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்துவதென்று வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் முடிவெடுத்திருக்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!
அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி