"தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படவில்லை என நிரூபிக்க முடியுமா?" – சீறிப்பாய்ந்த ராஜேந்திர பாலாஜி

First Published May 25, 2017, 4:55 PM IST
Highlights
rajendra balaji challenges private milk company


தனியார் பாலில் ராசாயணம் எதுவும் கலக்கப்படவில்லை என நிரூபிக்க முடியுமா என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.  

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ஆவின் பால் மட்டுமே தரமாக தயாரிக்கபடுவதாகவும், தனியார் பாலில் ரசாயனம் கலக்கபடுவதாவும் குற்றம் சாட்டினார்.

பால் கெடாமல் இருக்க தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், தனியார் பால் மூலம் குழந்தைகளுக்கு கூட புற்றுநோய் வருவதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து பாலில் ரசாயனம் கலக்கபடுவதாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக ஆரோக்கியா பால் இயக்குனர் சத்தியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், தனியார் பாலில் ராசாயணம் எதுவும் கலக்கப்படவில்லை என நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், தனியார் பால் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ரசாயனம் கலந்திருப்பது நிரூபிக்கபட்டால் தனியார் பால் நிறுவனம் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

பால் பற்றாக்குறை என்பதற்காக விஷத்தை குடிக்க முடியுமா என்றும், மக்களின் தேவைகேற்ப ஆவின் பால் விநியோகம் செய்யப்படும் எனவும், தெரிவித்தார்.

பால் முகவர்கள் சங்கம் மீது ஏராளமான புகார் வந்த வண்ணம் உள்ளன எனவும், தனியார் பால் நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தப்படும் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

click me!