
அரியலூர்
அறுபது ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாராமல் முட்புதர்கள் மண்டிக்கிடக்கும், புள்ளம்பாடி வாய்க்காலையும் தூர்வாரி கரையை அகலப்படுத்த வேண்டும என விவசாயிகள் ஆட்சியரிடத்தில் முறையிட்டனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் (பொ) எஸ்.தனசேகரன் தலைமைத் தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள்:
அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் வரை சாலையோரம் இரு புறங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்தி, பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரியலூர், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையம் அமைக்க வேண்டும்.
முதல்வரின் மருத்துவக் காப்பீடு அட்டையை உடனே வழங்க வேண்டும்.
வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டப் பணியாளர்களிடம், பான் அட்டை கட்டாயம் கொண்டு வர கட்டாயப்படுத்தக் கூடாது. மீறும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டுறவு சங்க புதிய உறுப்பினர்களுக்கும் விவசாய கடன்களை வழங்க வேண்டும்.
தமிழக அரசு மேட்டூர் அணையை தூர்வாருதல் போல, 60 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாராமல் முட்புதர்கள் மண்டிக்கிடக்கும், புள்ளம்பாடி வாய்க்காலையும் தூர்வாரி கரையை அகலப்படுத்த வேண்டும்.
திருமானூர், திருமழபாடி, அழகியமணவாளம், ஏலாக்குறிச்சி, தூத்தூர், திருபுரந்தான் ஆகிய பகுதிகளில் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழாகவட்டாங்குறிச்சி பெரிய ஏரியை தூர்வார வேண்டும்.
சுத்தமல்லி நீர்த்தேக்கத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு பணம் கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாட்டிறைச்சி தடைச் சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும்.
வண்டல் மண் எடுப்பதற்கு ஊர் மக்களிடையே எல்லைப் பிரச்சனை ஏற்படுவதால், கிராமங்கள்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அரியலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள 30 ஆயிரத்து 480 எக்டர் முந்திரி சாகுபடிகள் தண்ணீர் இல்லாமல் காய்ந்துள்ளதால், அதனை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
ஏரியை தூர்வார்வதற்கு தன்னார்வலர்களுக்கும் அனுமதி வழங்கி, அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் ஆட்சியரிடம் வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு விளக்கமளித்தார் மாவட்ட ஆட்சியர் (பொ) எஸ். தனசேகரன்.
இந்தக் கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் ரெ.சதானந்தம்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.