கடலூர்
பொங்கல் பண்டிகையையொட்டி பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அங்கு துடுப்பு படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளையில், ஐந்தாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பிச்சாவரம் சுற்றுலா மையம் ஒன்று உள்ளது. இங்குள்ள உப்பனாற்றின் அருகில் மருத்துவ குணம் கொண்ட சுரப்புன்னை காடுகள் அடர்ந்து காணப்படுகிறது.
இந்தக் காடுகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்கள் உள்ளன. இந்த சுரப்புன்னை காடுகளை பார்த்து ரசிப்பதற்காக வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து விடுமுறை நாள்களில் ஏராளமான சுற்றுலப் பயணிகள் வருகைத் தருவது வழக்கம்.
இந்த நிலையில், தற்போது பொங்கல் விடுமுறையையொட்டி கடந்த இரண்டு நாள்களாக பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு பயணிகளின் வருகை அதிகளவில் உள்ளது.
இவர்கள் துடுப்பு படகு மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட படகில் சவாரி செய்து சுரப்புன்னை காடுகளின் அழகை ரசித்து வியந்தனர். மேலும், சிலர் சுற்றுலா மைய வளாகத்தில் உள்ள உயர்மின் கோபுரத்தில், நின்று சுரப்புன்னை காடுகளை படம் பிடித்துச் சென்றனர்.
இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் தாங்கள் கொண்டுவந்த உணவுகளை அங்குள்ள குடில்களில் அமர்ந்து குடும்பத்துடன் சாப்பிட்டனர்.
பொங்கல் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்ததால் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் கூட்டம் களை கட்டியது.