
DSP Sundharesan vehicle seizure : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சுந்தரேசனுக்கு வழங்கப்பட்ட அலுவலக வாகனம் எந்தக் காரணமும் கூறப்படாமல் திரும்பப் பெறப்பட்டதாகவும், இதனால் அவர் சீருடையுடன் நடந்தே அலுவலகம் செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. டிஎஸ்பி சுந்தரேசன் கடந்த 2024 நவம்பர் முதல் மயிலாடுதுறையில் டிஎஸ்பியாகப் பணியாற்றி வருகிறார். இவர் கள்ளச்சாராய விற்பனை மற்றும் மது கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வந்ததாகவும், 5 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்ததாகவும் சுந்தரேஷன் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் நேர்மையாக இருப்பதால் உயர் அதிகாரிகள் தன்னை பழிவாங்குவதாகவும், "டார்ச்சர்" செய்வதாகவும் சுந்தரேசன் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்து பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்து, சுந்தரேசன் கூறியவை தவறான தகவல்கள் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் டிஎஸ்பி சுந்தரேஷன் மீது அடுக்கான புகார்களை காவல்துறை தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.