
நீலகிரி
துஷ்ட தேவதைகளால் குற்றச் சம்பவம் நடைபெறாமல் இருந்ததால் கருப்ப சாமிக்கு கிடா வெட்டி காவலாளர்கள் பூஜை செய்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இதுகுறித்து விசாரிக்க காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
பாலக்காடு மாவட்டம், நெம்மாறையில் நடைபெறும் "வல்லங்கி திருவிழா" கேரளாவில் மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த விழாவில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கவும், துஷ்ட தேவதைகளால் கலவரம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றும் காவலாளர்கள் வேண்டுதல் வைப்பது வழக்கம்.
அசம்பாவிதம் நடைபெறவில்லை என்றால் கருப்பசாமிக்கு கிடா வெட்டி கோவிலில் விருந்து சாப்பிடுவர். கடந்த மாதம் நடைபெற்ற இந்த திருவிழாவில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடை பெறாததால் கிடா விருந்து வைக்கப்பட்டது.
விருந்தில் பங்கேற்க சர்க்கிள் ஆய்வாளர் உன்னிகிருஷ்ணன் வந்தார். சீருடை அணியாமல் காவலாளர்கள் பூஜை செய்தனர்.
துஷ்ட தேவதைகளால் குற்றச் சம்பவம் நடைபெறாமல் இருக்க கருப்ப சாமிக்கு கிடா வெட்டி பூஜை செய்யும் சம்பவம் கேரளாவில் நடைபெற்றதால் மக்களில் சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதசார்பற்று சட்டத்தின் படி இயங்க வேண்டிய காவலாளர்கள் கிடா விருந்து உள்ளிட்ட மதம் சம்பந்தப்பட்ட எந்த விழாவும் நடத்தக்கூடாது என்று அரசு உத்தரவு உள்ளது. இந்த உத்தரவை மீறி காவலாளார்கள் கிடா வெட்டி பூஜை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதையடுத்து காவல் கண்காணிப்பாளர் பிரதீஸ்குமார், ஆலத்தூர் டி.எஸ்.பி. கிருஷ்ணதாஸ், பாலக்காடு சிறப்பு டி.எஸ்.பி. செய்தாலி ஆகியோரை அழைத்து நெம்மாறை காவலாளர்கள் கருப்பசாமிக்கு கிடா வெட்டி பூஜை நடத்தியது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
அந்த விசாரணையில் கருப்ப சாமிக்கு கிடா பூஜை நடத்தியது உண்மை என்பது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.