
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், கணவன் இல்லாத பெண்களின் முன்னேற்றத்திற்காக ’பிங்க் ஆட்டோ’ என்ற திட்டத்தை சென்னை ரோட்டரி கிளப் தொடங்கியது. இந்த திட்டம் முதன்முதலில் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி வழங்கப்பட்டு அதன்பின்னர் அவர்களுக்கு ஆட்டோ வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக இந்த திட்டத்தை தொடர முடியாத நிலையில், கொரோனா முடிவுக்கு வந்த உடன் மீண்டும் இந்த திட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
அதன்படி பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு வழங்கப்படும் இந்த பிங்க் ஆட்டோ திட்டம் இந்த ஆண்டு நடைபெற்றது. சென்னை அம்பத்தூரில் உள்ள ரோட்டரி மருத்துவமனை வளாகத்தில் இன்று இந்த ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதுவரை இந்த திட்டத்தின் மூலம் மொத்தம் 88 ஆட்டோக்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பெண்களின் முன்னேற்றம், பெண்களின் பாதுகாப்பே இந்த திட்டத்தின் நோக்கம். குறிப்பாக கணவர் இல்லாத பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெண்களுக்காக பெண்களால் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.