கிருஷ்ணகிரி
தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஓட்டுநரை பாட்டிலால் தாக்கிவிட்டு பணம் பறித்த கொள்ளையர்கள் நால்வரை மக்கள் விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே காமன்தொட்டி அருகே உள்ள எ.தின்னூரைச் சேர்ந்தவர் திம்மப்பா மகன் சாந்தகுமார் (22). இவர் உஸ்தனப்பள்ளியைச் சேர்ந்த அருண் என்பவருக்குச் சொந்தமான லாரியை ஓட்டி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு ஒசூர் நோக்கிச் சென்றார். காமன்தொட்டி அருகில் சென்றபோது, நான்கு பேர் கொண்ட கும்பல் லாரியை வழி மறித்து ஓட்டுநர் சாந்தகுமாரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளது.
அதற்கு சாந்தகுமார், தான் இப்போது தான் சுமை ஏற்றிச் செல்வதாகவும், தன்னிடம் பணம் இல்லை என்றும் கூறியதற்கு ஆத்திரமடைந்து அந்த கும்பல், சாந்தகுமார் சட்டைப் பையில் இருந்த ரூ.100-ஐ பறித்துக் கொண்டு, கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் சாந்தகுமாரின் தலையில் தாக்கியுள்ளனர்.
இதில், பலத்த காயமடைந்த அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த மக்கள் திரண்டதையடுத்து தப்பி ஓட முயன்ற நான்கு பேர் கொண்ட கும்பலை மக்கள் விரட்டி பிடித்தனர்.
பின்னர், அவர்கள் நால்வரையும் கட்டி வைத்து, சூளகிரி காவலாளர்களுகு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், அங்கு வந்த சூளகிரி காவல் ஆய்வாளர் சம்பத் மற்றும் காவலாளர்கள் நால்வரையும் சூளகிரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் மத்திகிரியைச் சேர்ந்த உமரேஷ் (20), இர்பான் அலி (20), ஒசூரைச் சேர்ந்த ராகுல் குமார் (20), வித்யா சாகர் (20) என தெரியவந்தது. அதையடுத்து, அவர்கள் நால்வரையும் காவலாளர்கள் கைது செய்தனர்.