
தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல் தன்னுடைய சேவையை முடக்கியதை அடுத்து, வாடிக்கையாளர்கள் கிளை நிறுவனங்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல் நிறுவனம் தனது சேவையை நிறுத்துவதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. ஏர்செல் நிறுவனத்தை, தமிழகத்தை சேர்ந்த சின்னக்கண்ணன் சிவசங்கரன் என்பவர் கடந்த 1999 ஆம் ஆண்டு தொடங்கினார். அதன் பின் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல்-ன் பங்குகளை வாங்கியது. தமிழகத்தில் தொடங்கப்பட்ட இந்த சேவை, படிப்படியாக நாடு முழுவதும் விரிவாக்கப்பட்டது., சுமார் 8.5 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்கி வந்தது ஏர்செல் நிறுவனம்.
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது சேவையை தொடங்கிய ஜியோ, பல்வேறு அதிரடி சலுகைகளையும், இலவசங்களையும் அறிவித்தது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஜியோ சேவைக்கு மாறினர். இதனால், ஏர்டெல், ஐடியா, வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் ஏர்செல் நிறுவனம் கடுமையாக பாதிக்கப்ப்டடது. 120 கோடி ரூபாயாக இருந்த லாபம், 5 கோடி ரூபாயாக சரிந்தது. இது தொடர்ந்து வந்த நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ரூ.120 கோடி நஷ்டமாகியது. லாபம் ஈட்டப்படாத தொலைத்தொடர்பு வட்டாரங்களில் தனது சேவையை ஏர்செல் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் நிறுத்தியது. மேலும் டவர் உரிமையாளர்களுக்கு பாக்கி செலுத்தாததால், ஏர்செல் நிறுவன டவர்கள் அணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாது ஏர்செல் நிறுவனத்தில் சுமார் 5000 பேர் பணியாற்றி வருகின்றன. அவர்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஏர்செல் நிறுவனம் முன்னறிவிப்பின்றி பல்வேறு இடங்களில் தனது சேவையை நிறுத்துவதாக புகார் எழுந்தது. அதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மொபைல் எண், போர்டபிலிட்டியில் வேறு நிறுவனத்துக்கு மாறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்களது சேவை முடக்கப்பட்டதை அடுத்து, ஏர்செல் நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து வாடிக்கையாளர்கள் கூறும்போது, தற்போது ஒன்றரை கோடி வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் ஏர்செல் சேவை முடக்கப்பட்டுள்ளது. ஏர் செல் நிறவனத்தில் இருந்து வேறொரு நிறுவனத்துக்கு மாறுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. தற்போது நாங்கள் கட்டியுள்ள பணத்துக்கு எந்தவித பதிலும் இல்லை. 15 வருடங்களாக பயன்படுத்தி வரும் செல்போன் எண், தற்போது முடக்கப்பட்டுள்ளதற்கு ஏர்செல் நிறுவன அதிகாரிகள் உரிய பதிலளிக்கவில்லை என்று கூறி வருகின்றனர். இந்த பிரச்சனை கடடந்த 4, 5 நாட்களாக இருந்து வருவதாகவும், இது குறித்து உரிய பதிலை அளிக்க அதிகாரிகள் மறுப்பதாகவும், வாடிக்கையாளர்கள் கூறுகின்றன. இந்த நிலையில் கோவை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏர்செல் நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.