குடியரசுத் தினத்தையொட்டி, வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்திய திருநாட்டின் 73வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றினார். குஆளுநர் தேசிய கொடியை ஏற்றி வைத்த போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆளுநர் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முப்படைகளின் அணிவகுப்பு, டெல்லி குடியரசு தின அணிவகுப்பிற்காக அனுப்பப்பட்டு மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர்.
இதைத் தொடர்ந்து சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின்போது வீரதீர செயல் புரிந்த காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார். இன்னிலையில் குடியரசு தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உயிருக்கு போராடியவரை தோளில் தூக்கி சென்ற கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி சிறப்பித்தார்.
அதேபோல் திருவொற்றியூரில் கட்டட விபத்தின்போது குடியிருப்புவாசிகள் துரிதமாக வெளியேற்றி உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுத்த தனியரசுக்கு வீரதீர செயலுக்கான பதக்கம் வழங்கப்பட்டது. சென்னையில் கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அன்று ஒருநாள் காலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு ஒன்று வருகிறது. அதில், பேசிய நபர் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக பதைப்பதைப்புடன் கூறுகிறார்.
உடனே இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி காவல் துறையினருடன் அங்கு செல்கிறார். தகவல் வந்ததூ போலவே கல்லறைகளுக்கு நடுவே இளைஞர் ஒருவர் அசைவற்ற நிலையில் கிடந்தார். அவரை சோதனை செய்ததில் அவருக்கு உயிர் இருப்பதை அறிந்துகொண்டார் ராஜேஸ்வரி. இதையடுத்து சற்றும் யோசிக்காத தனது தோளில் தூக்கி போட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சில நாட்களுக்கு பின் உயிரிழந்தார். அவர் ஷெனாய் நகரைச் சேர்ந்த உதயா (25) என்பதும், அவர் கல்லறையில் தங்கி பணி செய்துவந்தவர். இருப்பினும் ராஜேஸ்வரி அந்த இளைஞரை தோளில் தூக்கிச் சென்ற வீடியோவும் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி பெரும் பாராட்டுகளை வாங்கி குவித்தது.