ஒமைக்ரான் பரவல் எதிரொலி..ஊரடங்கு தளர்வுகள் இனி கிடையாது.. சுகாதாரத்துறை செயலர் சூசகம்

By Thanalakshmi VFirst Published Jan 1, 2022, 3:22 PM IST
Highlights

ஒமைக்ரான் பரவுவதால் அதிக தளர்வுகள் அளிக்க விரும்பவில்லை என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. அன்றாட கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் 27,48,045 பேராக உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,62,990 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,03,799 ஆக உள்ளது. 

இதனால் தமிழகத்தில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள சிலவற்றிற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருமணம் மற்றும் அதைச் சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிக பட்சம் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.உணவகங்கள், விடுதிகள் , அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50விழுக்காடு வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுவர் என்றும், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும், முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தொடர்ந்து தமிழகத்தில் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வரை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தககண்காட்சி மற்றும் பொருட்கண்காட்சி ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

 இதுகுறித்துப் பேட்டி ஒன்றில் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “தமிழகத்தில் ஒமைக்ரான் பரவ வாய்ப்பு உள்ளதால் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒமைக்ரான் பரவுவதால் அதிக தளர்வுகள் அளிக்க தமிழக அரசு விரும்பவில்லை. ஒமைக்ரான் பாதித்தவர்களில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு கொரோனா கவனிப்பு மையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே இதுவரை 46 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. 115 பேரின் மாதிரிகளை சோதனை செய்ததில் 74 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 120 பேரில் 66 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

click me!