பொன் விளையும் பூமியை கருவேலங்காடாக மாற்றிய சிபிசிஎல் 620 ஏக்கரை கைப்பற்றியது ஏன்? சீமான் கேள்வி

By Velmurugan sFirst Published May 11, 2024, 10:55 PM IST
Highlights

நானையில் விளை நிலத்திற்கு உரிய இழப்பீடு கேட்டுப் போராடிய பனங்குடி விவசாயிகளை திமுக அரசு கைது செய்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக விளைநிலங்களைப் பறித்த சிபிசிஎல் (Chennai Petroleum Corporation Limited (CPCL) - சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை) நிறுவனம், நிலத்திற்கான இழப்பீட்டினை தராமல் ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. நிலத்திற்கு உரிய இழப்பீடு கேட்டுப் போராடிய அப்பாவி விவசாயிகளை திமுக அரசு காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவி கைது செய்து சிறையில் அடைத்துள்ளது அப்பட்டமான எதேச்சதிகாரப்போக்காகும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான நாகை மாவட்டத்தில் உள்ள பனங்குடி, நரிமணம் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத்திற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு சிபிசிஎல் நிறுவனம் 620 ஏக்கர் நிலங்களைக் கேட்டபோதே அப்பகுதி விவசாயிகள் விளைநிலங்களை வழங்க மறுத்து எதிர்ப்பினை தெரிவித்ததோடு, பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தனர். விவசாயிகளின் கடும் எதிர்ப்பினையும் மீறி, வேளாண் நிலங்களை அபகரித்து CPCL நிறுவனத்திடம் வழங்கிய தமிழ்நாடு அரசு, நான்கு ஆண்டுகளாகியும் அதற்கான இழப்பீட்டினை பெற்றுத்தராமல் ஏமாற்றி வருவது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும்.

Latest Videos

நான் எப்ப வந்தாலும் ஓசில புரோட்டா தரணும் இல்ல . . . உணவகத்தில் கேமரா, பொருட்களை உடைத்து ரௌடி அட்டகாசம்

ஏற்கனவே 1992ல் சிபிசிஎல் நிறுவனம்  கையகப்படுத்திய  600 ஏக்கர் நிலத்தில்  400 ஏக்கர் நிலத்தை கருவேலங்காடாக மாற்றியுள்ளது. பொன் விளைந்த பூமியான விளைநிலத்தை ஒன்றும் செய்யாமல் கருவேலங்காடாக மாற்றிய CPCL நிறுவனம், மேலும் 620 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது ஏன்?  வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய விளைநிலங்களை பறித்துக்கொண்டு, உரிய இழப்பீடு வழங்காமல் ஏமாற்றி வரும் சிபிசிஎல் நிறுவனத்திற்கு எதிராக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அறப்போராட்டத்தை முன்னெடுத்து வந்த விவசாயிகளை காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தி திமுக அரசு கைது செய்துள்ளது கொடுங்கோன்மையின் உச்சமாகும். 

விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய நாம் தமிழர் கட்சியின் திருமருகல் ஒன்றியச்செயலாளர் அன்புத்தம்பி சதீஷ்,  அவரது மனைவி தீபா, அவர்களின் நான்கு வயது மகள் சாய் நிவி ஆகியோரையும் திமுக அரசின் காவல்துறை கைது செய்துள்ளது. விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டினை பெற்றுத்தருவதற்குப் பதிலாக எண்ணெய் நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு போராடும் மக்களை கைது செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் சமூகநீதி காக்கும் சமத்துவ ஆட்சியா? தான் ஒரு டெல்டாகாரன் என்று பெருமிதம் கொள்ளும் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் விவசாயிகளின் மீதான அடக்குமுறைகளுக்கு என்ன பதில் கூறப்போகிறார்? 

மத்திய அரசு நிறுவனத்திற்கு எதிராக கிளர்ச்சி; நூற்றுக்கணக்கான விவசாயி கூலி தொழிலாளர்கள் கைது - நாகையில் பரபரப்பு

ஆகவே, இழப்பீட்டு உரிமை கேட்டு அறவழியில் போராடியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகள் மீதான வழக்கினை உடனடியாக ரத்து செய்து, அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டினையும் உடனடியாகப் பெற்றுத்தர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!