வடதமிழகத்துக்கு விரைவில் ரெட் அலார்ட்... மக்களே உஷாராயிருங்க!!!

By vinoth kumarFirst Published Nov 20, 2018, 12:09 PM IST
Highlights

கஜா புயலின் தாக்கத்தின் வடு மறையாக நேரத்தில், வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்படலாம் என  தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

கஜா புயலின் தாக்கத்தின் வடு மறையாக நேரத்தில், வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்படலாம் என  தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, தனியார் வானிலை ஆய்வு ஆர்வலர் பிரதீப் ஜான், தமிழ்நாடு வெதர்மேன் முகநூல் பதிவில் தெரிவித்து இருப்பதாவது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்கு பகுதியில் நகர்ந்து, நாளை கடலூர் நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் காற்று பலமாக வீசாது. இது நாளை நிலப்பகுதி அருகே வரும்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

 

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பதை உறுதியாக கூற முடியாது. அதற்கான சூழல்கள் சாதகமாக இருக்கிறது. ஆனால் வலுவிழந்த புயலாக இருந்தாலும், வியப்படையக் கூடாது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு நோக்கி மேகக்கூட்டங்களை இழுத்துச் செல்லும். இதன் காரணமாக வடதமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தில் மிக, மிக கனமழை பெய்யும். காரைக்கால், தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை, அதை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். வடதமிழகத்தில் பெய்யும் இந்த கன கனமழையால், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடக்கூடும். இதையொட்டி வடதமிழகத்தில் தீவிரமான மழை பொழிவு இருக்கும். 

சென்னையில் இன்று முதல் மிதமான மழை ஆங்காங்கே பெய்யும். இன்று இரவு முதல் கனமழை பெய்யும். நாளை காலையில் மீண்டும் மழை பெய்யும், இந்த மழை நாளை மறுநாள் வரை நீடிக்கும். 23ம் தேதியில் இருந்து மழை படிப்படியாகக் குறையும். சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக, 850மிமீ மழை பெய்யும். ஆனால், தற்போதுவரை 225 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்த 3 நாட்கள் சென்னைக்கு மிக முக்கியமானது. இந்த மழையை சென்னை தவறவிடாது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், நாமக்கல் மாவட்டங்களில்கூட ஒருநாள் மழை இருக்கும். நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வீசப்படும் காற்றை கஜா புயலோடு ஒப்பிட முடியாது. இது கடலோர பகுதியை கடக்க ஒரு நாள் ஆகும். இது நிலப்பகுதியை அடையும் போது வலுவடையவும் வாய்ப்புள்ளது. 

தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது உறுதியாகியுள்ளது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறலாம். இதனால், வடதமிழக மாவட்டங்கள், கடலூர், புதுசேரியில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வரை காற்றுவீசக்கூடும். தமிழகத்துக்கு வடகிழக்குப்பருவமழையின் மூலம் இதுவரை 305மிமீ மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை 243 மி.மீ., மழை மட்டுமே கிடைத்துள்ளது. அடுத்த 3 நாட்கள் வடதமிழகத்தில் மழை இன்னும் தீவிரமாகி, எதிர்பார்த்த மழை பொழிவு கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!