Tamilnadu Rains :'ரிப்பீட்' மோடில் கனமழை பெய்யும்.... உருவாகியது 'புதிய புயல்'.. மக்களே உஷார்....

By Raghupati RFirst Published Dec 1, 2021, 6:49 AM IST
Highlights

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று முதல் மழை சற்று குறைந்து வருகிறது. மேலும் 2 நாட்களுக்கு மழை குறைந்துதான் காணப்படும் என்று ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரி கடல் பகுதி வரை நீடிப்பதன் காரணமாக, அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.

இன்று,  கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்  என்றும், நாளை மற்றும்  நாளை மறுதினம்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், 4-ந் தேதியான  சனிக்கிழமை அன்று, ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது உருவாகி இருக்கிறது. 

இது தெற்கு அந்தமான் கடல்பகுதிக்கு நகர்ந்து, இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும். அதன்பின்னர்,  மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுதினம் மத்திய வங்க கடல் பகுதியில் புயலாக வலுவடைகிறது என்றும், அது 4-ந் தேதி வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடல் பகுதியை நெருங்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.

இதன் காரணமாக தமிழகத்துக்கு கன மழைக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை. ஆனால், அந்தமான் கடல் பகுதி மற்றும் அந்தமான் தீவு பகுதிகளில் இன்றும், தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நாளையும், மத்திய வங்க கடல் பகுதியில் நாளை மறுதினமும், 4-ந் தேதி மத்திய, மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 75 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த நாட்களில் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.இதேபோல், அரபிக்கடலில் கோவா-மராட்டியம் கடற்பகுதியில்  நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்று தாழ்வு பகுதியாகவும் வலுப்பெறக்கூடும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

click me!