தமிழகத்தில் டிச.15 வரை ஊரடங்கு நீட்டிப்பு… தமிழகம்-கேரளா இடையே போக்குவரத்துக்கு அனுமதி!!

By Narendran SFirst Published Nov 30, 2021, 8:28 PM IST
Highlights

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் கருதியும், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர் மழை பொழிந்து வருகின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதி நடைமுறையிலுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 15 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது. ஏற்கனவே ஆந்திர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது போன்று கேரள மாநிலத்திற்கும் பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூட கூடிய இடங்களில் கீழ்க்கண்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். நுழைவு வாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான் கட்டாயமாக  வைக்க படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவர்களும் வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது. கடைகளின் நுழைவுவாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது ஒரு நபருக்கும் மற்றொரு வருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும். நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் மற்றும் நோய் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் ,சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும். வைரஸ் நோய்த் தொற்றுகளைத் தடுப்பதற்கும், நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள்  உள்ள பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளின் படி தீவிரமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும்.

இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் தவிர இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிரமாக நோய்தொற்று பரவலை வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும். நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியே வருவதையும் ,கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மேலும் தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் கூட கொரோனா  மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி,  பொதுஇடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது ,கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும். நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் பொதுமக்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி முற்றிலும் அகற்ற உத்தரவிட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!