கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை… வேலூர் மாநகராட்சி அதிரடி உத்தரவு!!

By Narendran SFirst Published Dec 2, 2021, 6:57 PM IST
Highlights

வேலூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை விதித்து மாநகராட்சி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

வேலூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை விதித்து மாநகராட்சி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது  தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வகை வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. ஒமைக்ரான் தொற்று அதிகம் காணப்படும் தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே உருமாறிய கொரோனா வைரஸ் ஒமைக்ரான் தொற்றிலிருந்து மக்களை காக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து தமிழக அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் மக்கள் அலட்சியமாக தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றன. பெரும்பாலானோர் இன்னும் முதல் தவணை தடுப்பூசி கூட திருத்திக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்களை அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் வேலூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை விதித்து மாநகராட்சி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுக்குறித்து வேலூர் மாநகராட்சி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் ரேஷன் கடைகள், பள்ளிகள், திரையரங்குகள், டீக்கடைகள், வங்கிகள், பெட்ரோல் நிலையங்கள் என பொது இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்தகைய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது வேலூர் மாவட்டத்திலும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

click me!