தனியார் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை… பேராசிரியர் அதிரடி கைது... விருதுநகரில் பரபரப்பு!!

By Narendran SFirst Published Dec 2, 2021, 6:28 PM IST
Highlights

விருதுநகரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் கோவையில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த வாரம் பாலியல் துன்புறுத்தல் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் .இந்த விவகாரத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி , தனியார் பள்ளியின் முதல்வர் மற்றும் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இதேபோல் கரூர் அரசு காலனி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி சாவதற்கு முன்பு ஒரு உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார்.

அதில், நான் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்கிறேன். பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பெண் நானாக இருக்கணும் என உருக்கமாக கூறியிருந்தார். இது கரூர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் குறித்து இதுவரை முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையே அந்த மாணவி படித்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வாறு பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்கள் அதிகரித்து வருகின்றன. கோவை மற்றும் கரூர் மணவிகள் தற்கொலைக்கு பின்னர் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்திய தமிழக அரசு, பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் தெரிவிக்க 1098 என்ற எண்ணை அறிவித்தது. வாட்ஸ் ஆப் எண்களையும்  ஒரு சில மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவிகள் துணிச்சலுடன் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் விருதுநகரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் டென்சிங் பாலைய்யா. இவர் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி ஒன்றில் தாவரவியல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இதே கல்லூரியில் தேசிய மாணவர் படை அமைப்பையும் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் தன்னிடம் படிக்கும் மாணவிக்கு சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் பேராசிரியர் டென்சிங் பாலையா கைது செய்யப்பட்டுள்ளார். கைதை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உத்தரவின் அடிப்படையில் ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!