தந்தையின் இறுதிசடங்கில் பங்கேற்க ஹெலிகாப்டரில் வந்த மகன்.. நெகிழ்ச்சியில் உறைந்த ஊர் மக்கள்

By Thanalakshmi VFirst Published Dec 2, 2021, 4:22 PM IST
Highlights

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனது தந்தையின் இறுதி சடங்கிற்காக சாலை வழி வந்தால் தாமதமாகும் என்று, தனியார் ஹெலிகாப்டரில் பறந்து வந்த மகனின் பாசப்போராட்டம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. 72 வயதாகும் சுப்பையா அந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். இவருக்கு சசிகுமார் என்று ஒரு மகன் மட்டும் உள்ளார். இவர் திருப்பூரில் ரெடிமேட் ஆடைகள் தாயாரிக்கும் கம்பெனி வைத்துள்ளார். திருப்பூரில் தங்கி கம்பெனியை கவனித்து வரும் சசிகுமாருக்கு, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் நிறுவனங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சசிகுமார் கடந்த வாரம் வேலை காரணமாக, இந்தோனேசியா சென்றுள்ளார். அந்த சமயத்தில், கடந்த சில தினங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த சசிகுமாரின் தந்தை சுப்பையாவிற்கு நிலைமை மேலும் மோசமாகி, உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, வெளிநாட்டில் உள்ள மகன் சசிகுமாருக்கு, உறவினர்கள் மூலம் தந்தை இறந்த தகவல் சொல்லபட்டது. இதனைகேட்ட சசிகுமார், செய்வதறியாது மனம் கலங்கிப்போனார்.

மேலும், சசிகுமார் எப்படியாவது தந்தையின் இறுதிசடங்கில் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி, உடனடியாக, வெளிநாட்டில் இருந்த சசிகுமார், அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூர் விமானநிலையம் வந்தடைந்தார். பெங்களுரிலிருந்து தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடிக்கு சாலை மார்க்கமாக சென்றால், கண்டிப்பாக தாமதமாகிவிடும் என்பதை உணர்ந்த அவர், ஹெலிகாப்டரில் செல்ல முடிவு செய்தார். 

அதன்படி, பெங்களூரிலிருந்து சுமார் ரூ.5 லட்சம் வாடகை கொடுத்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று மாலை வந்து இறங்கினார். பின்னர் புதுக்கோட்டையிலிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக சொந்த ஊரான தென்னங்குடிக்கு புறப்பட்டார். மேலும் ஹெலிகாப்டரில் செல்லும் முடிவு எடுத்த சசிகுமாருக்கு , வானிலை பெரும் சவாலாக அமைந்தது. மேலும் ஹெலிகாப்டரில் நிரப்புவதற்காக வெள்ளை நிற பெட்ரோல் கொண்டுவருவதற்கும் காலம் தாமதம் ஏற்பட்டது. அனைத்து தடைகளையும் மீறி, தனது தந்தையின் உடலை காணவும் இறுதி சடங்கு செய்வதற்கும் மகன் நடத்திய போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் பெங்களூரிலிருந்து ஹெலிகாப்டரை இயக்கி வந்த பைலட் மற்றும் உதவியாளர் ஆகியோரை புதுக்கோட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்தார் சசிகுமார். தொடர் மழை காரணமாக வானிலை சரியானதும், ஹெலிகாப்டர் பெங்களூருக்கு புறப்பட்டு செல்லும் என்று கூறப்படுகிறது. 

தென்னங்குடி கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்ததும், இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. தந்தையின் இறுதிச் சடங்கிற்கு எப்படியாவது சென்று சேர வேண்டும் என்பதற்காக பல மைல் கடந்து வந்த மகனை பார்த்து ஊர்மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

தனது தந்தையின் இறுதி சடங்கிற்காக, தனியார் ஹெலிகாப்டரில் ரூ .5 லட்சம் செலவிட்டு வந்ததும் இல்லாமல், ஹெலிகாப்டரை இயக்கிய குழுவினரையும் நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்த சம்பவமும் அந்த மகனுக்கு தந்தையின் மீது எத்தனை பாசம் என்பதை உணர்த்தும் ஒன்றாகவே அமைந்துள்ளது.

இந்த காலகட்டத்தில் தந்தை, மகன் உறவு என்பது பெரும் விரிசலை கண்டுள்ளது. தன்னை பெற்றெடுத்த தாயையும் தந்தையும் வயதான காலத்தில் உடன் இருந்து கவனிக்காமல், போதிய அன்பு செலுத்தாமல் சுய லாபத்திற்காக முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடும் மகன்களுக்கு மத்தியில் சசிகுமார் உயர்ந்து நிற்கிறார். 
 

click me!