கட்டுகட்டாக அள்ளப்பட்ட பணம்.. 4 ஆண்டுகளில் மட்டும் 430 % சொத்து அதிகரிப்பு - திடுக்கிடும் தகவல்

By Thanalakshmi VFirst Published Dec 2, 2021, 6:47 PM IST
Highlights

கணக்கில் வராத ரூ.2.27 கோடி ரொக்கம், 38 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட பொதுப்பணி துறையின் செயற்பொறியாளர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் மீது தற்போது சொத்துக்குவிப்பு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
 

கடந்த 2017 ஏப்ரல் முதல் 2021 நவம்பர் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் இவர்களின் சொத்து மதிப்பு 430 % சதவீதம், அதாவது ரூ.42 லட்சத்திலிருந்து ரூ. 2 கோடி வரை அளவுக்கு உயர்ந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புதுறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

பொதுப்பணி துறையின் வேலூர் மண்டல தொழில்நூட்ப கல்வி செயற்பொறியாளராக பணியாற்றி வந்தவர் ஷோபனா. இவர் கட்டட ஒப்பந்தக்காரர்களிடம் ரசீதுகளை அனுமதிக்க லஞ்சம் பெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில், வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி இரவு 10 மணியளவில் அதிரடி சோதனை நடத்தினர்.

அவர் சென்ற காரில் உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ.5 லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்ததோடு, வேலூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.15 லட்சத்து 85 ஆயிரம் ரொக்கம், ரூ.3 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புடைய 3 காசோலைகள், 18 ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

மேலும் ஒசூரிலுள்ள அவரது சொந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத, ரூ.2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 300 ரொக்கம், 38 பவுன் தங்க நகைகள், 1.320 கிலோ வெள்ளி , ரூ.27 லட்சத்து 98 ஆயிரம் மதிப்புடைய நிரந்தர வைப்பு சான்றிதழ், 11 வங்கி கணக்கு புத்தகங்கள், வங்கி லாக்கர் சாவிகள் ஆகியவைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் ஷோபானாவிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே ஷோபனா திருச்சி மாவட்ட பொதுப்பணித்துறையின் கட்டுமானம், பராமரிப்பு துணை கண்காணிப்பு பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் கணக்கில் வராத பணம், நகைகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் ஷோபனாவை வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் செவ்வாய்கிழமை அதிரடியாக கைது செய்தனர். 

இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக, தற்போது பொதுப்பணிதுறை செயற்பொறியாளர் ஷோபனா, அவரது கணவரான ஒய்வுபெற்ற தனியார் நிறுவன பொறியாளர் நந்தகுமார் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலும் ஒரு வழக்குபதிவு செய்துள்ளனர்.

வேலூர் மண்டல தொழில் நூட்ப கல்வி செயற்பொறியாளராக ஷோபனா கடந்த 2017 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2021 நவம்பர் 15 தேதிவரை  பணியாற்றி உள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில், அவரது குடும்ப சொத்து மதிப்பு 430 சதவீதம் உயர்ந்திருப்பதை லஞ்ச ஒழிப்பு கணக்கிட்டுள்ளனர்

அதாவது கடந்த 2017 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ரூ. 42 லட்சத்து 60 ஆயிரத்து 828 இருந்த அவர்களது குடும்ப சொத்து மதிப்பு 2021 நவம்பர் 15 ஆம் தேதியில் ரூ.2 கோடியே 65 லட்சத்து 96 ஆயிரத்து 470 அளவுக்கு உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் ஷோபனா மற்றும் அவரது கணவர் நந்தகுமார் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

click me!