தமிழகத்தில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் பருவ மழை பொய்த்துப் போனது அது மட்டுமல்லாமல் கடந்த 3 மாதங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. சென்னையில் கூட கிட்டதட்ட 6 மாதங்களுக்குப் பிறகுதான் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், தென்மேற்கு பருவக் காற்றால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது.
.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக அரியலூர் நகர் பகுதிகளில் 9 சென்டிமீட்டரும், தர்மபுரி மாவட்டம் அரூரில் 8 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
அதேபோல் திருவண்ணாமலை, விருதுநகர், நாகை மற்றும் மதுரை மேட்டுப்பட்டியில் தலா 5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
சென்னையில் மாலை நகரின் சில இடங்களில் இரவு பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தாம்பரம், குரோம்பேட்டை போன்ற பகுதிகளில் தற்போதும் கன மழை பெய்து வருகிறது.