கடலூர்
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உடனே பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே டி.கோபுராபுரத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று கூடினர்.
அங்கே விவசாயிகள் அனைவரும் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், "கடந்தாண்டு நாங்கள் அதிகளவில் உளுந்து பயிரிட்டு பராமரித்து வந்தோம். மேலும் அதனை பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்து ஒரு ஏக்கருக்கு ரூ.190 கட்டினோம்.
இந்த நிலையில் வறட்சியால் தண்ணீர் இன்றி எங்களது உளுந்து பயிர்கள் முற்றிலும் கருகியது. இதையடுத்து பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க கோரி நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பம் அளித்தோம்.
ஆனால், 50 சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் நாங்கள் பெரும் அவதி அடைந்து வருகிறோம்.
இதனைத் தடுக்க வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உடனே பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உரிய இழப்பீடு வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரினர்.
பின்னர் அவர்கள், இதுகுறித்த கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திராவை சந்தித்து அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.