
கோயம்புத்தூர்
கோயம்புத்தூரில் விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்துவிட்டதால் அதனை மீட்டு தரக்கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுபாளையம் அண்ணாஜிராவ் சாலையில் அண்ணா காய்கறி சந்தை உள்ளது. இந்த சந்தையில் வியாபாரம் செய்ய விவசாயிகளுக்கு 5 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த சந்தையில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பாகற்காய், அவரைக்காய், பீர்க்கன்காய் உள்பட பல்வேறு நாட்டு காய்கறிகளை இருசக்கர வாகனங்களில் கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் நடைபாதை வியாபாரிகள் என்று கூறி சிலர் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு காய்கறி வியாபாரம் செய்து வந்தனராம். இதனால் அந்த விவசாயிகள் கொண்டுவந்த காய்கறிகளை வைத்து விற்பனை செய்ய இடமில்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று காலை விவசாயிகளும், நடைபாதை வியாபாரிகளும் திடீரென தகராறி ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகள், "தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும்" என்று வலியுறுத்தி அண்ணாஜிராவ் சாலையில் காலை 10.50 மணிக்கு திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், விவசாயிகள் தாங்கள் காய்கறிகளை கொண்டுவந்த இருசக்கர வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தியதால் அந்த வழியே போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் தாசில்தார் ரங்கராஜன், காவல் ஆய்வாளர் சென்னகேசவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இரு தரப்பினரையும் அழைத்து இன்று (செவ்வாய்கிழமை) மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதனை ஏற்றுக் கொண்ட இரு தரப்பினரும் சாலை அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.