தோல்வி பயத்தில் பிரதமருக்குத்தான் தூக்கம் வரவில்லை: தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்!

By Manikanda PrabuFirst Published Mar 22, 2024, 8:07 PM IST
Highlights

தோல்வி பயத்தில் பிரதமருக்குத்தான் தூக்கம் வரவில்லை என திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டு தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்

மக்களவைத் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக 21 தொகுதிகளில் நேரடியாக களம் கான்கிறது. பேச்சுவார்த்தைகள் முடிந்து வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், தமிழகம் முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.

அதன்படி, மார்ச் 22ஆம் தேதி (இன்று) முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை 20 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். முதல் நாளான இன்று திருச்சி சிறுகனூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், திருச்சி என்றாலே திமுகதான். திருச்சியில் இருந்து தொடங்கும் பாதை எப்போதும் வெற்றிப்பாதைதான என்றார். முன்னதாக சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தனக்கிருக்கும் ஆதரவை பார்த்து திமுகவினருக்கு தூக்கம் வரவில்லை என்றார். அதற்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின், “தேர்தல் நேரம் என்பதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். திமுகவினருக்கு தூக்கம் வரவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். தோல்வி பயத்தில் அவருக்குத்தான் தூக்கம் வரவில்லை.” என்றார்.

கடும் நிதி நெருக்கடியிலும் கூட திமுக பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால், ஒன்றிய அரசு வெள்ள நிவாரணம் கூட தர மறுக்கிறது என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். பாஜக செய்த அத்தனை துரோகங்களுக்கும் துணையாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. துரோகங்களை செய்ய்து விட்டு தற்போது கூட்டணி முறிந்து விட்டதாக நாடகமாடுகிறார் எனவும் ஸ்டாலின் சாடினார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ஆளுநரிடம் மரியாதைக்காக ஒரு பொக்கே கொடுத்து விட்டு, இங்கிருந்து பிரசாரம் தொடங்குகிறது என சொல்லிவிட்டு வந்தேன். அவர் பெஸ்ட் ஆஃப் லக் என்று சொல்லி அனுப்பினார். ராஜ் பவனில் தொடங்கிய இந்த பயணம் குடியரசுத் தலைவர் அலுவலகம் வரை போகும்.” என்றார்.

தமிழர்கள் குறித்து சர்ச்சை கருத்து; பாஜக அமைச்சர் ஷோபா மீதான விசாரணைக்கு தடை!

முன்னதாக, பேசிய திமுக கூட்டணி திருச்சி வேட்பாளரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ, மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரானதாக இருக்கும் என்றார். திமுக பெரம்பலூர் வேட்பாளரான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு பேசும்போது, உங்கள் வீட்டுப் பிள்ளையாக செயல்படுவேன் என உறுதி அளித்தார்.

click me!