திமுக கவுன்சிலர்களை அலறவிட்ட அமைச்சர் கே.என்.நேரு..! நடந்தது என்ன?

By Ajmal KhanFirst Published Jun 30, 2022, 1:20 PM IST
Highlights

திமுக கவுன்சிலர்களின் செயல்பாடு தொடர்பாக புகார் வந்த நிலையில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னை மாநாகராட்சி ஆலோசனை கூட்டத்தின் போது கண்டித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவுன்சிலர்களுக்கு எச்சரிக்கை

 திமுகவின் கோட்டையாக சென்னை என கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு திமுக சட்டமன்ற தேர்தலில் சென்னையில் 90% இடங்களில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக திமுக கவுன்சிலர்களின் செயல்பாடு தான் காரணம் என கூறப்பட்டது. எனவே இந்த முறை அப்படி பட்ட பெயர் வாங்கி விட கூடாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார். இந்தநிலையில், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுடன் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், திமுகவின் சென்னை மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், மயிலை வேலு,  உள்ளிட்டோர் பங்கேற்றனர். பருவ மழை துவங்கவுள்ள நிலையில் சென்னையில் நடைப்பெற்று வரும் மழை நீர்வடிகால் கட்டுமான பணிகளை துரிதமாக முடிப்பது குறித்தும், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இதர திட்டப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இருந்த போதும்  இந்த விஷயங்களை தாண்டி பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட வாரியாக நடத்தப்பட்ட ஆலோசனையில், கவுன்சிலர்கள் மீது கட்டுமான பணிகளுக்கு கமிஷன் வாங்குவது, சாலையோர கடைகளில் கமிஷன் வாங்குவது, கட்ட பஞ்சாயத்துகளில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து பேசப்பட்டுள்ளது.

திடீர் விசிட் சென்ற முதலமைச்சர்.. பணியில் இல்லாமல் இருந்த அதிகாரி சஸ்பெண்ட்.. அடுத்து நடந்தது என்ன..?

மீண்டும் திமுகவில் இணைகிறாரா பாஜக முக்கிய நிர்வாகி சரவணன்..! அவரே சொன்ன பரபரப்பு தகவல்

பெண் கவுன்சிலர்கள் பணி செய்யவில்லை

கவுன்சிலர்கள் செய்த தவறுகளை ஓவ்வொன்றாக பட்டியலிட்ட அமைச்சர் கே.என்.நேரு , கவுன்சிலர்களை கடுமையாக கடிந்து கொண்டதோடு, எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக பெண் கவுன்சிலர்கள் பணியே செய்வதில்லை எனவும், பெண் கவுன்சிலர்களின் கணவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாகவும் கூட்டத்தில் குற்றம்சாட்டியுள்ளார். இதே நிலை நீடித்தால் உங்களை தூக்கி விடுவேன் என அமைச்சர் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.  இறுதியில் இனி ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் என்றும் நாள் தோறும் மக்களை சந்தித்து , அவர்களின் குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் அறிவுரை வழங்கினார். பருவ மழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும்  தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் நேரு  உள்ளிட்ட அமைச்சர்கள் ஆலோசனை வழங்கி அனுப்பியுள்ளனர்.
 

இதையும் படியுங்கள்

நரிக்குறவர் வீட்டிற்கு சென்றதால் நான் விளம்பர பிரியனா? எதிர்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்

 

click me!